கதை நேரம்

on Tuesday, April 7, 2009

எனக்குக் கதை கேட்கப் பிடிக்கும். ஆனால் இப்போதெல்லாம் யாரும் கதை சொல்வதில்லை. பெண்களும் குழந்தைகளும் என்னிடம் கதை கேட்பதுண்டு. ஆனால் என்னிடம்தான் சொல்வதற்குக் கதைகள் இருக்காது. காரணம் , நான் கேட்ட கதைகளெல்லாம் அவ்வப்போது மறந்து போய் விடும். என்னாலும் கதைகளை சொந்தமாக இட்டுக் கட்டிச் சொல்லத் தெரியாது.

இரண்டு நாட்களுக்கு முன்னால் உயிர்மையில் வந்திருந்த சல்மான் ருஷ்டியின் ' உலகின் புகலிடம் ' என்ற சிறுகதையைப் படித்துக்

கொண்டிருந்தேன். அப்போது அதிலிருந்த ஒன்றிரண்டு பீர்பால் கதைகளைப் படித்து , மொத்த பீர்பால் கதைகளையும் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. இணைய தளத்தில் தேடிய போது எஸ்.நிவேதா என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் (செட்டினாடு வித்யாஷ்ரம் , சென்னை) தொகுத்த பீர்பால் கதைகள் படிக்கக் கிடைத்தன. இந்தக் காலத்தில் சினிமாப் பாடல்களைப் பார்த்து , அந்தக் குத்து டான்ஸ்களைப் பயிற்சி செய்து பள்ளி ஆண்டு விழாக்களில் ஆடிக் காட்டும் மாணவ ' மணிகளி ' ன் இடையே இப்படிப் பட்ட மாணவிகளும் இருக்கிறார்கள் என்பது சந்தோஷமாக இருந்தது. .

அந்தக் கதைகளைப் படித்த போது சமீபத்தில் என்னிடம் கேட்கப் பட்ட ஒரு கேள்வி ஞாபகம் வந்தது. கேள்வி கேட்டவர் ஒரு பேராசிரியை. கேள்வி: "ஒரு கட்டுரை எழுத உங்களுக்கு ஒரு மணி நேரம் ஆகுமா ? அல்லது , இரண்டு நேரம் ஆகுமா ?" நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை , சொன்னால் புரியாது என்பதனால்.

எழுதுவது என்பது சோதனைச் சாலையில் இருக்கும் ஒரு விஞ்ஞானியின் நிலையை ஒத்தது. எப்போது முடிவு தெரிகிறதோ அப்போதுதான் சோதனை முடியும். ஒரு எழுத்தாளர் இருக்கிறார் , அட்டைப் பெட்டி தயாரிப்பது போல் அரை மணிக்கு ஒரு கட்டுரையை எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கிறார். அட்டைப் பெட்டிகளுக்கும் பயன்பாடு உள்ளன என்பது வேறு விஷயம். ஆனால் நான் செய்வது அது அல்ல. அல்லது , அந்தப் பேராசிரியை செய்வது போல் மாணவர்களின் பெயர் ஜாபிதாவைத் தயாரித்துக் கொண்டிருப்பவன் அல்ல நான்.

ஸீரோ டிகிரியையும் , ராஸ லீலாவையும் எழுதி முடிக்க எனக்குத் தலா மூன்று வருடங்கள் ஆயின. கட்டுரை என்றால் ராப்பகலாக எழுதினால் மூன்று தினம் பிடிக்கும்.

பீர்பாலிடம் அக்பர் ஒருமுறை "நம் தேசத்தில் எத்தனை குருடர்கள் இருப்பார்கள் ?" என்று கேட்டார். "இதோ எண்ணிச் சொல்கிறேன் , ஜஹான் பனா!" என்று கூறிய பீர்பால் நகரின் பிரதான அங்காடியில் சென்று அமர்ந்து கொண்டு செருப்புத் தைக்க ஆரம்பிக்கிறார். அதைப் பார்த்த பலரும் "என்ன செய்கிறீர்கள் பீர்பால் ?" என்று கேட்க , ஒரு குறிப்பேட்டை எடுத்து , தன்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டவர்களின் பெயர்களை எழுதி கொண்டு வருகிறார் பீர்பால். இதைக் கேள்விப்பட்ட அக்பரும் அங்காடிக்கு வந்து "என்ன செய்து கொண்டிருக்கிறாய் பீர்பால் ?" என்று கேட்க , அவர் பெயரும் குறிப்பேட்டில் ஏறுகிறது. மறுநாள் அரசவை கூடிய போது குருடர்களின் பட்டியலை அக்பரிடம் கொடுக்கிறார் பீர்பால். பட்டியலின் கடைசியில் தன் பெயரும் இருக்கக் கண்ட அக்பர் மிகவும் கோபப்பட்டு கேட்க , " நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைக் கண்களால் பார்த்த பிறகும் மற்றவர்களைப் போலவே நீங்களும் அந்தக் கேள்வியைக் கேட்டீர்கள் ; அதனால்தான் உங்கள் பெயரையும் சேர்க்க வேண்டியதாயிற்று" என்கிறார் பீர்பால்.

பேராசிரியையின் கேள்வியைக் கேட்டதும் எனக்கு ஞாபகம் வந்த கதை இதுதான்.

பீர்பால் எப்படி அக்பரின் அரசவையில் சேர்ந்தார் என்பது பற்றிய கதை இது:

மகேஷ் தாஸ் என்பவன் அக்பரின் தேசத்தைச் சேர்ந்த ஒரு குடிமகன். ஒருநாள் வேட்டைக்குச் சென்று திரும்பிய அக்பருக்கு வழிகாட்டி உதவினான் மகேஷ். அதற்குப் பிரதியாகத் தன் மோதிரம் ஒன்றைப் பரிசளித்த அக்பர் , அரண்மனைக்கு வந்தால் அங்கே அவனுக்கு நல்லதொரு வேலையும் தருவதாகச் சொல்கிறார் அக்பர்.

அந்த மோதிரத்தை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குச் செல்கிறான் மகேஷ் தாஸ். காவலாளி விடவில்லை. பிறகு மோதிரத்தைக் காண்பித்தவுடன் ' இவன் பெரிய பரிசு ஒன்றைத்தான் வாங்கச் செல்கிறான் ; அதில் நாமும் கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டால் என்ன ?' என்று நினைக்கும் காவலாளி "உன்னை உள்ளே விட்டால் உனக்குக் கிடைக்கும் பரிசில் எனக்கும் பாதி பங்கு தர வேண்டும்" என்று சொல்லி உள்ளே விடுகிறான். (ஆக , இந்தியாவில் அந்தக் காலத்திலேயே லஞ்சம் இருந்திருக்கிறது).

உள்ளே சென்ற மகேஷ் தாஸ் அக்பரைச் சந்தித்து மோதிரத்தைக் காண்பிக்க , " உனக்கு என்ன பரிசு வேண்டும் , கேள் ?" என்று கேட்க , "50 கசையடிகள் வேண்டும்" என்கிறான் மகேஷ். ' இவனுக்கு என்ன பைத்தியமா ?' என்று நகைக்கின்றனர் சபையோர். ஆச்சரியமுற்ற அக்பரும் "ஏன் இப்படிக் கேட்கிறாய் ?" என்று கேட்க , " பரிசை வாங்கிக் கொண்டு சொல்கிறேன்" என்கிறான் மகேஷ். 25 கசையடிகள் முடிந்ததும் நிறுத்தச் சொல்லி மீதி அடிகளை வாயிற்காப்போனுக்குத் தரும்படி கூறுகிறான் மகேஷ். அப்போதுதான் மன்னருக்கு விஷயம் விளங்குகிறது. வாயிற்காப்போனுக்கு 50 கசையடிகளும் , 5 ஆண்டு சிறைத்தண்டனையும் அளித்த அக்பர் , மகேஷின் புத்தி சாதுர்யத்தை வியந்து அவனைத் தன் பிரதான மந்திரியாக ஆக்கிக் கொள்கிறார். அந்த மகேஷ் தாஸ் தான் பீர்பால்.

இப்படிப் பல கதைகளைத் தொகுத்திருக்கும் நிவேதாவுக்கு என் வாழ்த்துக்கள்.


Source : http://www.charuonline.com

பின் தொடரும் நிழல் !

அது ஒரு வியாழக் கிழமை ; காலை ஏழு மணி இருக்கும். வீட்டை பெருக்கிக் கொண்டிருந்த என் சகதர்மினி மீரா , திடீரென்று , "" வியாழக்கிழமையும் , அதுவுமா இப்படியா ஒரு வாயில்லா ஜீவனைக் கொல்றது... சாயி ராம்! '' என்று வருத்தத்துடன் சொன்னாள்.

"" என்னம்மா , என்ன சொல்கிறாய் ?'' என்று கேட்டபோது , என் கட்டிலுக்குக் கீழே நசுங்கிக் கிடந்த ஒரு மரவட்டையைக் காண்பித்தாள்.

ஆம்! தூங்கியெழுந்ததும் அந்தக் காரியத்தைச் செய்தவன் நான் தான். எனக்கு மரவட்டை என்றாலே பயம். கட்டிலை விட்டு எழுந்ததும் கீழே பார்த்தால் மரவட்டை. பயத்தில் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் , செருப்பைப் போட்டு அதை ஒரு நசுக்கு நசுக்கினேன். நரநரவென்ற சப்தத்துடன் செத்துப் போனது மரவட்டை. அதோடு அதை மறந்து போனேன்.

இப்போது மீரா சொன்னதும் , ஏதோ ஒரு கொலை செய்து விட்டது போல் தோன்றியது. வியாழக்கிழமை பாபாவுக்கு உகந்த நாள். இன்றைக்குப் பார்த்து இதை நான் செய்திருக்கக் கூடாது தான். ஆனால் , வெள்ளிக்கிழமை செய்திருந்தாலும் , இதையே தான் சொல்லியிருப்பாள் மீரா. என்ன , கடவுளின் பெயர் தான் மாறியிருக்கும்!

ஒருநாள் கூட தப்ப முடியாது. ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாள் தான். செய்தது தப்பு ; பேசாமல் ஒரு குச்சியால் எடுத்து , அதை வெளியே போட்டிருக்கலாம். அனாவசியமாக எந்த உயிரையும் இனி கொல்வதில்லை என்று சங்கல்பம் செய்து கொண்டேன். அனாவசியமாக என்ற வார்த்தையைக் கவனித்துக் கொள்ளுங்கள். நான் ஒரு தீவிர அசைவம் , உணவில் குறைந்த பட்சம் ஒரு சுட்ட கருவாடாவது இருக்க வேண்டும் என்று நினைப்பவன் ; இல்லாவிட்டால் , அது எவ்வளவு சுவையான உணவாக இருந்தாலும் இறங்காது. ஆனால் , அசைவ உணவைப் பொறுத்தவரை தமிழ்நாடு கொஞ்சம் பிரச்னையான இடம் தான். சிங்கப்பூரிலிருந்து என் நண்பர் கவுதம் இங்கே வந்த போதுதான் அதை உணர்ந்தேன்.

கவுதம் , சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர். அவருக்கு காபி , டீ தவிர மற்ற எல்லாவற்றிலும் அசைவம் இருக்க வேண்டும். காலையில் ஆப்பம் அல்லது இடியாப்பத்தோடு பாயா. கீரையில் நெத்திலி பொடி. பிரெட் என்றால் அதில் சார்டின் மீன்.

கவுதம் பரவாயில்லை. அவர் மகன் இன்னும் மோசம். ஒரு முறை , மேல் படிப்புக்காக அமெரிக்கா செல்லும் போது , கவுதமின் மனைவி சென்னைவாசி என்பதால் , மனைவியையும் , மகனையும் சென்னையில் விட்டு விட்டு சென்றார்.

பையனுக்கு நம்மூர் உணவு பிடிக்கவில்லை. இங்கே அசைவக் காரர்கள் என்ன செய்கின்றனர் ? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் கறி வாங்கக் கிளம்புகின்றனர். அந்த நாட்களில் ஏதோ ரஜினியின் புதுப்படம் ரிலீஸ் ஆன மாதிரி மட்டன் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதெல்லாம் சைவர்களுக்குத் தெரியாத பிரச்னை. இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் , பெரும்பாலான கடைகளில் கிடைப்பது செம்மறி ஆடு.கடித்தால் ஜவ்வு மாதிரி , " சவுக் , சவுக் ' என்று மென்றுகொண்டே இருக்க வேண்டியது தான். நூற்றில் ஒரு கடையில் தான் வெள்ளாடு கிடைக்கும்.

நிலமை இப்படியிருக்க , கவுதமின் பையன் சாப்பாட்டில் தொட்டுக் கொள்ள ரத்தப் பொறியல் கேட்பான்.

கவுதமின் மாமனார் ஒரு கோடீஸ்வரர். இருந்தாலும் , ரத்தப் பொரியலுக்கு எங்கே போவர் ? அதெல்லாம் நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்காது. முனியாண்டி விலாசில் வாங்கிக் கொடுக்க அவர்களுக்கு பயம்.

" ரத்தப் பொரியல் இல்லாவிட்டால் , மூளை வறுவல் கொடுங்கள்! ' என்று அடம் பிடித்துள்ளான் பையன்.

ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது ; போய் பார்த்தேன். சிங்கப்பூரில் கொழு , கொழு என்று இருந்தவன் இப்போது இளைத்துத் துரும்பாக மாறியிருந்தான்.

மூளை , ரத்தம் எல்லாம் கூடப் பரவாயில்லை... வேர்க்கடலையில் சென்னாங்குனி போட்டுக் கேட்கிறான்.

சென்னாங்குனி மீன் நம் விரல் நகம் சைசுக்கு இருக்கும். மலேசியா , பர்மா போன்ற கிழக்காசிய நாடுகளில் வேர்க்கடலையில் கூட சென்னாங்குனி மீனைப் போட்டுத் தான் சாப்பிடுவர்.

கவுதமின் பையனைப் பார்த்த போது தான் நான் ஏன் இப்படி ஒரு மீன் பைத்தியமாக இருக்கிறேன் என்பதே எனக்கு விளங்கியது. காரணம் , என் அம்மாச்சி அம்மாவைப் பெற்ற பாட்டி ஒரு பர்மீஸ் காரி. என் அம்மா வழித் தாத்தா ரங்கூனில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு பர்மாக்காரியையே மணம் செய்து கொண்டிருந்தார்.

சின்ன வயதில் அவரைப் பார்த்திருக்கிறேன். சட்டையை உள்ளே விட்டு லுங்கியை அதற்கு மேல் கட்டிக் கொள்வார். "யார்ரா இது பைத்தியம் ?' என்று அப்போது , நினைத்துக் கொள்வேன். பர்மாவின் தேசிய உடை லுங்கி தான். சென்ற ஆண்டு தாய்லாந்து சென்றிருந்த போது , பர்மாவுக்கும் விசிட் அடித்தேன். நரகத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது ; முக்கியமாக , செக்ஸ் தொழில்.

உலகில் எல்லா நாடுகளிலும் அந்தத் தொழில் செழிப்பாகவே நடந்து கொண்டிருந்தாலும் , பர்மாவுக்கும் , மற்ற நாடுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதை கவனித்தேன்.

பர்மாவின் செக்ஸ் தொழிலாளிகள் முக்கால்வாசிப் பேர் சிறுமிகள். 12 வயதிலிருந்து 16 வயது இருக்கலாம். அதிலும் , ஒரு நாள் யாங்கூன் நகரின் பிரதான சந்தை வழியே நடந்து கொண்டிருந்த போது , என்னை இன்பத்துக்கு அழைத்த சிறுமியின் வயது 10 தான் இருக்கும். பணத்தைக் கொடுத்து விட்டு பேசிப் பார்த்தபோது , அது சிறுமி அல்ல ; சிறுவன் என்று தெரிந்தது. பணத்துக்காக சிறுமி வேடம் போட்டிருக்கிறான்.

நான் கொடுத்த தொகை நம்மூர் பணத்தில் ரூ. 50. அதற்கே என் காலைத் தொட்டு வாங்கிக் கொண்டான் சிறுவன்! ஆனால் , அதற்குப் பிறகு நடந்தது தான் பர்மியர்களின் இயல்பை எனக்குக் காட்டியது. அவனுக்குத் தெரிந்த பத்து , இருபது ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு , அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினேன்.கிளம்பும்போது பணத்தை என்னிடம் திருப்பிக் கொடுத்தான் சிறுவன். ஒன்றும் செய்யாமல் வாங்கிக் கொள்ள மாட்டானாம்! ஒருகணம் ஆடிப் போய் விட்டேன். பிறகு வற்புறுத்தி அவனிடம் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தேன். பிறகு தாய்லாந்து திரும்பிய போது தான் தெரிந்தது அந்நாட்டிலுள்ள பாதி செக்ஸ் தொழிலாளிகள் பர்மாவிலிருந்து இறக்குமதியானவர்கள் என்று.

தாய்லாந்து இப்போது வேகமாக முன்னேறி வருவதால் அங்குள்ள பெண்கள் இந்தத் தொழிலுக்கு வருவதில்லையாம். ஜாடையில் பர்மியப் பெண்களுக்கும் , " தாய் ' பெண்களுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை என்பதால் , " இறக்குமதி ' கன ஜோராக நடந்து வருகிறது. ஜாடை என்றதும் ஞாபகம் வருகிறது ; பர்மாவில் என்னிடம் எல்லாரும் பர்மிய மொழியிலேயே பேசத் துவங்கி விட்டனர். உங்களுக்கு முற்பிறவி என்பதில் நம்பிக்கை இருக்கிறதோ , இல்லையோ , இந்த ஜீன் விஷயத்தை நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பெண் சொன்ன விபரம் கேட்பதற்கே பயங்கரமாக இருந்தது.

செப்டம்பர் மாதம் 15, 1997. நூறு பேர் கொண்ட ராணுவத் துருப்பு ஒன்று , ஒரு பர்மிய கிராமத்தினுள் நுழைகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களை இப்படித் தேடுவது அங்கே அடிக்கடி நடக்கும் விஷயம். அப்படித் தேடும் போது ராணுவத்தினர் அந்த இடத்திலுள்ள பெண்களைக் கற்பழித்துக் கொன்று விடுவது வழக்கம். இதையெல்லாம் அங்கே யாரும் தட்டிக் கேட்க முடியாது. மீறிக் கேட்டால் ராணுவம் துப்பாக்கியால் தட்டி விடும். இதற்குப் பயந்து அந்த கிராமத்தினர் அனைவரும் ஒரு காட்டுக்குள் சென்று பதுங்கி விட்டனர். ஆனால் , தீவிரமான தேடுதலுக்குப் பிறகு அவர்கள் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டனர்.

பெண்கள் 40; ஆண்கள் 50. ஆண்கள் அனைவரையும் கட்டிப் போட்டு , அவர்கள் முன்னிலையில் அந்த 40 பெண்களையும் ஒருவர் பாக்கி விடாமல் ராணுவத்தினர் கற்பழித்திருக்கின்றனர். இரண்டு இரவுகளும் , இரண்டு பகல்களும் நீண்டது அந்த வன்கலவிச் சம்பவம்.

பிறகு , அத்தனை பேரையும் சுட்டுக் கொன்றது ராணுவம். இதில் தப்பிப் பிழைத்த ஒரே ஒரு பெண் பர்மிய எல்லையைக் கள்ளத்தனமாகக் கடந்து தாய்லாந்து வந்து விட்டாள். பாங்காக்கின் சிவப்பு விளக்குப் பகுதி ஒன்றில் ஒருநாள் அந்தப் பெண்ணை நான் சந்தித்தேன். எனக்கு தாத்தாவின் ஞாபகம் வந்தது. யார் கண்டது ? ஒருவேளை , இவள் எனக்கு உறவுக் காரியாகக் கூட இருக்கலாம்!


Source : http://www.charuonline.com

சுபயோக சுயபோகம்

இப்போது அதிகாலை மணி 4.30. வழக்கம்போல் நான்கு மணிக்கு எழுந்ததும் மறந்து போய் பாத் ரூம் லைட்டைப் போட்டுத் தொலைத்து விட்டேன். ஆரம்பித்து விட்டார் நைட் வாட்ச்மேன் ரங்கன். தண்ணீர்க் குழாயை அவர் அடிக்கிற அடிக்கிற அடியில் ஆயிரம் யானைகள் ஒன்று சேர்ந்து பிளிறுவது போல் இருக்கிறது. எங்கே தியானம் செய்வது ? சரி , இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடலாம் என்று வாயிற் கதவைத் திறந்து வெளியே வந்து "இப்படி நான்கு மணிக்கெல்லாம் தண்ணீர் அடிக்க வேண்டாம் ரங்கன் , நாம்தான் முழித்துக் கொண்டிருக்கிறோம் ; ஆனால் இந்த சத்தம் மற்றவர்களுக்குத் தொந்தரவாக இருக்குமே ?" என்றேன். ஆனால் ரங்கனோ நான் நினைத்ததை விட வில்லங்கமான ஆள் போலிருக்கிறது. "அசோஸியேஷனில்தான் சொல்கிறார்கள் சார்" என்று இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புச் சங்கத்தின் நிர்வாகிகளைச் சுட்டினார். அவர்களிடம் எங்கே நான் பேசுவது ? இந்த வாட்ச்மேனிடம் பேசுவதற்கே ஒரு வருடம் எடுத்துக் கொண்டேன். மேலும் நீங்கள் அஞ்சலி படம் பார்த்திருந்தீர்களானால் நான் சொல்வதைச் சரியாக புரிந்து கொள்ள முடியும். அதில் வரும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் பிரபு வருவார் இல்லையா ? அவரை அந்தக் குடியிருப்புவாசிகள் எப்படி எதிர்கொள்வார்கள் , ஞாபகம் இருக்கிறதா ? இல்லாவிட்டால் ஒரு சுலபமான உதாரணம். இஸ்ரேலில் உள்ள ஒரு யூதர் குடியிருப்பில் வாழும் ஒரே ஒரு பாலஸ்தீனியன் போலத்தான் இந்தக் குடியிருப்பில் நான்...ஏதோ அவந்திகா இருப்பதால் எப்படியோ ஓடுகிறது கதை. அது சரி , குடியிருப்புச் சங்க நிர்வாகிகள் நான் இரவு இரண்டு மணிக்கு எழுந்தால் இரண்டு மணிக்கும் , நான்கு மணிக்கு எழுந்தால் நான்கு மனிக்குமா தண்ணீர் அடிக்கச் சொன்னார்கள் ? இதை நான் வாட்ச்மேன் ரங்கனிடம் கேட்கவில்லை. இவ்வளவு கேட்டதே தப்பு என்று நினைத்துக் கொண்டு உள்ளே வந்து இதை டைப் செய்ய ஆரம்பிக்கிறேன்.

யோகா செய்யவில்லையா ? இல்லை. அதுதான் இன்றைய கட்டுரையின் பொருளே.

அழகாய் இருக்கிறாய் ; பயமாய் இருக்கிறது என்ற கட்டுரையில் வந்துள்ள தாரா என்பவரின் கடிதத்தை இப்போது மீண்டும் ஒரு முறை படித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்தக் கட்டுரையை நன்றாக அனுபவிக்க முடியும்.

தாரா என்னைத் தொடர்பு கொண்டு இரண்டு வாரங்களுக்கு மேல் இருக்கும். அவருடைய புதல்வன் ராமுக்கு யக்ஞோபவீத நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க என் வீட்டுக்கு வந்தபோது பேசியதோடு சரி. திருச்சியில் நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி நடந்த அன்றுதான் எனக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிகழ்ச்சி. என் மின்னஞ்சல் பெட்டி கொள்ளை போனது , என் பெயரில் ஆயிரக் கணக்கான டாலர்கள் கொள்ளையடிக்க நடந்த முயற்சி பற்றியெல்லாம் புகார் கொடுக்கச் சென்றிருந்தேன். தமிழ் நாட்டின் மிக உயர்ந்த சிபாரிசில் போயிருந்தாலும் நிர்வாக எந்திரம் என்பதன் அபத்தங்களைக் கடந்துதானே ஆக வேண்டும் ?

கமிஷனர் அலுவலகத்தில் அது இரண்டாவது நாள். முந்தின தினமே புகார் கொடுத்து விட்டேன். இது அந்தப் புகார் தொடர்பான மேல் தகவல்கள். இதை வாங்கி வைத்துக் கொள்ள ஒரு நிமிடம்தான் பிடிக்கும். ஆனாலும் அந்த உயர் அதிகாரியை நேரில் பார்த்துக் கொடுக்க வேண்டும். மதியம் இரண்டு மணிக்கு நேரம் கொடுத்திருந்தார். சரியான நேரத்தில் சென்று விட்டேன். 5 மணிக்கு வந்தார் அதிகாரி. அவருக்கு அவரை விட பெரிய அதிகாரியுடன் முக்கிய வேலை. மூன்று மணி நேரம் சிலை போல் அமர்ந்திருக்க வேண்டி வந்தது. முன்னதாகவே அவர் வர மூன்று மணி நேரம் ஆகும் என்று தெரிந்திருந்தால் எங்காவது போய் விட்டு வந்திருக்கலாம். ஆனால் அவர் எப்போது வருவார் என்றும் யாருக்கும் தெரியவில்லை. 5 நிமிடத்தில் வந்து விடுவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தனர்.

நானோ இதுவரை ஒரு மின்சாரக் கட்டண அலுவலகம் , ரேஷன் ஆஃபீஸ் போன்ற எந்த அரசாங்க அலுவலகத்திற்கும் சென்றது கிடையாது. யாருக்காகவும் 5 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தால் மண்டையில் தேள் , பூரான் , நட்டுவாக்களி எல்லாம் கொட்டும். வியாழக்கிழமை அன்று மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை பாபா கோவிலில் தண்டம் பிடித்து நிற்பதோடு சரி. இரண்டு மணி நேரம் நடக்கும் அந்த விசேஷ பூஜை. பூஜை முடிந்ததும் தண்டம் பிடித்த இரண்டு பேருக்கும் மாலை மரியாதையெல்லாம் செய்து இரண்டு ஆள் சாப்பிடுவது போல் வெண் பொங்கல் , சர்க்கரைப் பொங்கல் என்று பிரசாதமும் கொடுப்பார்கள்.

தண்டச் சோறு என்று திட்டுவார்களே , கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்னை யாரும் அப்படித் திட்டியதில்லை. பள்ளியில் படிக்கும் போதே தலையணை தலையணை சைஸுக்கு புத்தகங்களைக் கொண்டு வந்து சிம்னி விளக்கில் படித்து வீட்டில் உள்ளவர்களை மிரட்டியவன் நான். படிப்பிலும் முதல் மதிப்பெண் என்பதால் என்னை யாரும் அப்படித் திட்ட நேர்ந்ததில்லை. கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் திட்டுவது போல் தண்டம் பிடித்து நிற்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான வேலை அல்ல. இரண்டு மணி நேரம் ஆடாமல் அசையாமல் தண்டத்தைப் பிடித்தபடி நிற்க வேண்டுமென்றால் சும்மாவா ? பெண்டு நிமிர்ந்து விடும். இரண்டு மணி நேரம் நடக்கலாம் ; ஆனால் வெறுமனே ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அதை விடக் கஷ்டம் அர்ச்சகராக இருப்பது. தீபாராதனை என்று வாயால் சொல்கிறோம். அதைச் செய்து பார்த்தால் தான் தெரியும் கஷ்டம். பாபா கோவிலில் ராஜா என்று ஒரு குருக்கள் இருக்கிறார். அவர் எனது நீண்ட கால நண்பர். காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வேலை. இடையில் நான்கு மணி நேரம் ஓய்வு. வயலில் வேலை பார்க்கும் ஒரு விவசாயியின் வேலையை விட இவருடைய வேலை கடினமானது என்பதைப் பக்கத்தில் நின்று பார்த்திருக்கிறேன். 108 தீபங்களுக்கும் நெய் ஊற்றி , ஏற்றி ஆராதனை காட்டும் போது அவர் தேகமே தீப்பிழம்பாகி தகிக்கும். சில சீனியர் குருக்கள்மார்கள் இருக்கிறார்கள். அவர்களின் வேலை வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம்.

சரி , பாபா கோவிலிலிருந்து கமிஷனர் அலுவலகம் செல்வோம். அதிகாரி எப்போது வருவார் என்ற யூகமே இல்லாமல் மூன்று மணி நேரம். கவனிப்பெல்லாம் எனக்கு ராஜ கவனிப்புதான் . ஆனால் மூன்று மணி நேரம் காத்திருந்ததில் ராஜ பிளவையே வந்தது போல் ஆகி விட்டது எனக்கு. அபத்தத்தின் உச்ச கட்டமான சூழ்நிலை அது. எதற்காக அந்த இடத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். நான் என்ன தவறு செய்தேன். யார் எனக்கு எந்தத் தீங்கு செய்தாலும் அதற்காக நான் காவல் நிலையம் செல்ல மாட்டேன். ஏனென்றால் , காவல் நிலையம் செல்வதே ஒரு தண்டனை. கஷ்டத்தையும் அனுபவித்து விட்டு காவல் நிலையம் சென்று மேலும் ஒரு கஷ்டத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்.

நான் யாருக்காகக் காத்திருந்தேனோ அந்த அதிகாரி வந்து புகாரைப் பார்த்துவிட்டு குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டதாகவும் , இத்தகவல்கள் மேற்கொண்டு எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறி என்னை ஒரு இன்ஸ்பெக்டரிடம் அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டருக்கு நான் யார் என்று தெரியுமா ? என்னை அமர வைத்து விட்டு என் எதிரிலேயே அவருடைய உதவியாளருக்கு இவ்விஷயம் பற்றி டிக்டேஷன் கொடுக்க ஆரம்பித்தார்.

சாரு நிவேதிதா என்ற ஒரு நபர்...

அந்த நேரம் பார்த்தா அவரை ஒரு அதிகாரி அழைக்க வேண்டும் ? எழுந்து சென்றார் இன்ஸ்பெக்டர். ஆறு மணி வரை அங்கே அமர்ந்திருந்தேன். அதற்கு மேல் பொறுமையில்லை. இன்ஸ்பெக்டரின் உதவியாளரிடம் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டுக் கிளம்பிவிட்டேன்.

அன்று இரவு எட்டு மணி அளவில் எனக்கு முதுகுத் தண்டின் கீழே வலி குடைய ஆரம்பித்தது. அந்த இடத்த்தில் இப்படி ஒரு வலியை அனுபவித்ததே இல்லை. வலியில் தேகமே நடுங்கியது. அவந்திகா தைலம் தடவி மஸாஜ் செய்து விட்டாள். ம்ஹூம் , பயனில்லை. வலி அதிகரித்துக் கொண்டே போனது. எதனால் இந்த வலி என்று புரிந்து விட்டது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக என்மீது வலிந்து திணிக்கப் பட்ட பிரம்மச்சரியம்தான் காரணம். அதனால் சென்ற வாரம் ஏற்பட்ட Blue balls வலியிலிருந்து தப்பிக்க சுயபோகத்தில் ஈடுபட நேர்ந்தது. வேறு என்ன வழி ? பாரியாள் காரைக்கால் அம்மையாரின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டாள். என்னைப் பொறுத்தவரை sex is a glass of water. வீட்டில் கிடைக்காவிட்டால் வெளியே கிடைக்கும். விலைக்கு அல்ல. தோழமை கொண்டு தருவோர் பலர் உண்டு. ஆனால் , அதில் இரண்டு சங்கடங்கள்...ஒன்று , வெளியே ' தண்ணீர் ' குடிப்பது இந்தியாவில் - முக்கியமாக - தமிழகத்தில் தடை செய்யப் பட்டிருக்கிறது. நானோ வாகனங்களே இல்லாத வெறும் சாலையாக இருந்தாலும் சிவப்பு விளக்கு விழுந்து விட்டால் பச்சை விளக்கு வரும் வரை நின்று கொண்டே இருப்பேன். அப்படிபட்டவன் இவ்வளவு பெரிய விஷயத்தில் சட்டத்தை மீறத் துணிவேனா ? இரண்டாவது , வி.எஸ்.நைப்பால் லண்டனில் இருந்த போது அடிக்கடி விலை மகளிரிடம் செல்வதுண்டாம். அது பற்றி வெளிப்படையாக எழுதியும் விடுவாராம். அதைப் படிக்கும் அவருடைய ( முதல்) மனைவி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இறந்து விட்டாராம். நான்தான் ஒரு விதத்தில் அவரது மரணத்திற்கே காரணம் என்று சமிபத்தில் கூறியிருக்கிறார் நைப்பால். அப்படிப் பட்ட பிரச்சினைகள் ஏதும் அவந்திகாவுக்கு வந்து விடகூடாது. அவளை நான் ஒரு தெய்வத்திற்கு நிகராக மதிக்கிறேன். அவள் பொருட்டு இந்த பிரம்மச்சரியத்தையும் ஏற்கலாம்தான். ஆனால் தேகம் ஒத்துழைப்பதில்லை.

என் மருத்துவரிடம் சென்று ப்ளூ பால்ஸ் பிரச்சினையைப் பற்றி விளக்குவதும் சாத்தியமில்லை. அந்த ஆயுர்வேத மருத்துவர் 24 வயதே நிரம்பிய ஒரு அழகிய - இந்த அழகிய என்ற வார்த்தையை delete செய்து விடவும் - இளம் பெண். அவர் நாடி பிடிக்க என் கைகளைத் தொட்டு விட்டு அடுத்து ரத்த அழுத்தம் பார்ப்பார். 160/120 காட்டும். (ஆனால் மறுநாள் வேறு இடத்தில் பார்த்தால் 130/90 என்று வரும்). 160/120 ஐப் பார்த்து அதிர்ச்சியுற்று , " ஓ...ரொம்ப அதிகமாக இருக்கிறதே ? என்ன காரணம் ? ஏதேனும் பதற்றமா ? இங்கே என்னைப் பார்க்க அவசரமாக வந்தீர்களா ?" என்று பல கேள்விகள் கேட்பார் டாக்டர். அவரை நான் பார்ப்பதும் , அவர் என் நாடியைப் பார்ப்பதும்தான் பிரச்சினை என்று அவரிடம் எப்படிச் சொல்ல முடியும் ? டாக்டரிடமும் இன்னும் சிலரிடமும் உண்மையை மறைக்காமல் விளம்ப வேண்டும் என்பார்கள். ஆனால் இப்படி ஒரு இளம் பெண்ணிடம் போய் என் பிரம்மச்சரியம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்றோ , இதனால் நான் படும் ப்ளூ பால்ஸ் அவஸ்தை பற்றியோ எப்படிச் சொல்வது , சொல்லுங்கள்.

உருட்டுத் தடியால் அடித்தது போல் வலிக்கும். அதிலிருந்து தப்பிக்க சுய போகம். 5 நாளில் ஏழெட்டு முறை. அதோடு யோகா. ஆக , யோகமும் போகமும் சேர்ந்து விட்டதால்தான் குழப்பம். அதுதான் இந்தத் தண்டுவட வலியில் கொண்டு வந்து விட்டது என்று நினைக்கிறேன். அதோடு சேர்ந்து கொண்டது கமிஷனர் அலுவலத்தில் காத்திருந்ததும்.

ஆங்கில மருத்துவர்கள் கூறுவார்கள் , சுய போகத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று. அதில் எனக்கு ஒரு சிறிதும் உடன்பாடு கிடையாது. சுயபோகம் செய்துவிட்டு யோகா செய்தால் எனக்கு ஜூரம் வந்து விடும். நான் மதுவை விட்டதற்கு மற்றொரு காரணமும் இதுதான். மது அருந்திய மறுநாள் யோகா செய்தால் ஜூரம் வந்து விடும். 4 கி.மீ. நடக்கலாம். ஆனால் யோகா நடையை விடக் கடினமானது.

ஆஸ்கார் ஒயில்டு இறந்ததற்குக் கூட இந்த சுய போகம் ஒரு காரணம். Dandy யாக வாழ்ந்த ஒருவனை ஹோமோசெக்ஸ் குற்றத்துக்காக சிறையில் போட்டு கடினமான உடல் உழைப்புக்கு ஆட்படுத்தினார்கள். ஒயில்டோ அது வரை ஒரு பிரபுவாக வாழ்ந்தவன். சிறையில் காற்றாலையில் வேலை. கிட்டத்தட்ட செக்கிழுப்பதைப் போன்ற வேலை அது. செக்குக்குப் பதிலாகக் காற்றாலை. தனிமை , குளிர் , கடுமையான உடல் உழைப்பு - இந்த மூன்றின் சுமையையும் அவன் சுய போகம் என்ற ஒன்றின் மூலமாகவே கடக்க முற்பட்டான். அதுவே அவனுடைய மரணத்துக்குக் காரணமாக இருந்தது.

இரவு எட்டு மணிக்குத் தொடங்கிய தண்டுவட வலி ஒன்பது மணியளவில் தாள முடியாமல் போக , அலோபதி மருத்துவரான சாயி ரமணனிடம் ஓடினேன். வாழ்க்கை வரலாற்றையெல்லாம் சொல்லாமல் தண்டுவட வலியைப் பற்றி மட்டும் சொன்னேன். ஒரு ஊசி போட்டார். நரம்பை வலுப்படுத்தும் ஒரு மாத்திரையும் , வைட்டமின் மாத்திரயும் கொடுத்தார். அரைமணி நேரத்தில் சரியாகி விட்டது. (அந்தத் தருணத்தில்தான் நாகர்கோவிலிலிருந்து அந்தச் சிறுபத்திரிகை அன்பர் எனக்கு போன் செய்து மிரட்டி டார்ச்சர் கொடுத்தார்).

இங்கே ஆங்கில மருத்துவம் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். என் நண்பன் குணசேகரனுக்கு ஆங்கில மருத்துவமே பிடிக்காது. ஐந்தரை அடி உயரத்துக்கு 100 கிலோ இருந்தான். போய் கொழுப்பை சோதனை செய்து பார் என்றால் ஆங்கில மருத்துவம் பற்றித் திட்டி லெக்சர் கொடுப்பான். என்னைப்போல் நீயும் பை பாஸ் அறுவை சிகிச்சைக்குத் தான் போகப் போகிறாய் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். பிறகு என் ஆலோசனைப் படி பட்டை அடிப்பதை நிறுத்திவிட்டு , தினமும் காலையில் பட்டைப்பொடியை ( Cinnamon) தேனில் கலந்து சாப்பிட்டு 65 கிலோவுக்கு வந்து விட்டான்.

மது அருந்தினால் கொழுப்பு குறையும் ; ரத்தம் இறுகாமல் நீர்க்கும். இந்தக் காரியங்களெல்லாம் இதயத்துக்கு நல்லது. ஆனால் நம் ஆட்கள் மது அருந்தினால் மகா மட்டமான எண்ணெயில் முக்கி வறுத்த கோழி ஒரு கிலோவை அல்லவா விழுங்கி வைக்கிறார்கள் ?

ஆனால் குணசேகரன் இப்போது மனநல மருத்துவரை நாடிச் சென்று கொண்டிருப்பதாக வள்ளுவர் சொன்னார். (வள்ளுவர் பற்றி ஏற்கனவே அறிமுகப் படுத்தியிருக்கிறேன்). காரணம் என்னவென்றால் , மது அருந்துவதை நிறுத்திவிட்டதால் நண்பர்கள் யாரையும் சந்திப்பதில்லை. தனிமை. மன உளைச்சல். இன்ன பிற. "இதைவிட அவன் எங்களோடு சேர்ந்து தண்ணியே அடித்துக் கொண்டிருக்கலாம் சாரு" என்றார் வள்ளுவர்.

***

நான் மட்டும் தண்டுவட வலிக்கு ஆங்கில மருத்துவரை நாடாமல் சித்த மருத்துவரையோ , ஆயுர்வேத மருத்துவரையோ நாடியிருந்தால் என் கதி அதோகதி தான். இம்மாதிரி வலியின் கொடுமையில் பல பேர் தற்கொலையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையெல்லாம் முடிந்து மறுநாள் காலை எழுந்து டைப் செய்து கொண்டிருந்தேன். ஒன்பது மணி இருக்கும். "தாராவின் நம்பரைக் கொடு ; அவரிடம் பேச வேண்டும்" என்று வந்தாள் அவந்திகா.

" என்ன பேசப் போகிறாய் ?"

" உன் மின்னஞ்சல் பெட்டிக்குள் நுழைந்த திருடன் எல்லோரிடமும் பணம் கேட்கும் விஷயம் பற்றித்தான்."

" நீயே பேசிக்கொள் ; இது சம்பந்தமாக நான் யாரோடும் பேசத் தயாராக இல்லை" என்று சொல்லி தொலைபேசி எண்ணைக் கொடுத்தேன்.

நண்பர்கள் சிலர் நான் எழுதுவதைப் படிப்பதில்லை. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று எதுவும் தெரிந்து கொள்வதும் இல்லை. அது பற்றி எனக்குப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சமயத்தில் எனக்கு போன் செய்து கீழ்க்கண்டவாறு டார்ச்சர் கொடுப்பார்கள்.

" என்ன சாரு , எப்படி இருக்கீங்க ?"

' ம்ம்ம்...நல்லா இருக்கேன்."

" ம்ம்ம்...அப்புறம் ?"

" ம்ம்ம்...சொல்லுங்க..."

" என்ன ஒன்னும் சத்தத்தையே காணும் ?"

" அப்படீன்னா ?"

" எழுதறதே இல்ல போல்ருக்கு இப்போல்லாம் ?"

" ராஸ லீலா படிச்சீங்களா ?"

" கேள்விப் பட்டேன். இன்னும் வாங்கலே. அது என்னா 400 ரூ. விலை போட்டிருக்காங்க ?"

" அநியாயம்தான் , என்ன பண்றது ? 40 ரூ தான் போடச் சொன்னேன்... ஆனா இந்த மனுஷ்யபுத்திரன் நான் என்ன சொன்னாலும் அதுக்கு எதிராத்தான் செய்றாரு..."

" ஆமாமா , அவர் ஒரு மாதிரின்னுதான் நானும் கேள்விப்பட்டிருக்கேன்...ம்...அப்புறம் ஒன்னும் எழுதலியா ?"

" எங்கே எழுதறது ? குடிக்கவும் கும்மாளம் போடுறதுக்கும்தானே நேரம் சரியா இருக்கு ?"

" குடியைக் குறைச்சுடுங்க சாரு...ஹெல்த்துக்கும் நல்லதில்ல..."

" அதுதான் பார்க்கிறேன்...முடில்லன்னா எதாவது டி-அடிக்ஷன் செண்டர்ல சேர்ந்துட வேண்டியதுதான்..."

இப்படியே போகும் உரையாடல். கீழ்ப்பாக்கம் மென்ட்டல் அஸைலத்திலிருந்து சுவரேறிக் குதித்துத் தப்பி வந்ததும் நேராக சாரு நிவேதிதாவின் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்து போன் செய்து விடுவார்கள் படுபாவிகள்.

எனக்கு தாரா போன்ற நெருங்கிய நண்பர்களைப் பற்றி மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பற்றி அவரிடமிருந்து எந்த விசாரிப்பும் இல்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே அவருக்குத் தெரியாது போலும் என்று விட்டு விட்டேன்.

தாராவிடம் பேசி விட்டு அவந்திகா போனை என்னிடம் கொடுத்தாள். இதுபோல் போனை கொடுக்கக் கூடாது என்று பலமுறை அவளை நான் எச்சரித்திருக்கிறேன். இருந்தாலும் கேட்க மாட்டாள்.

" சாரு...நீங்கள் மலேஷியா போயிருப்பதாகவும் , பணத்துக்குக் கஷ்டப்படுவதாகவும் நேற்று இரவு எனக்கு ஒரு மெயில் வந்தது...பதறிப் போய் விட்டேன்..."

" தாரா , தயவு செய்து அது பற்றி இப்போது நான் பேசும் நிலையில் இல்லை. பிறகு பேசுவோம்..."

" ம்ம்...அவந்திகாவை விட்டுப் பேசச் சொல்லும்போதே நினைத்தேன்...அதனால்தான் உங்களிடம் போனை கொடுக்கச் சொன்னேன்..."

" நான் அவளைப் பேசச் சொல்லவில்லை...நாம் அப்புறம் பேசலாம்..."

" அதுசரி...ஏன் உபநயனத்துக்கு வரவில்லை ? ரொம்பவும் எதிர்பார்த்தேன்..."

" நான் அன்றைய தினம் பூராவும் போலீஸ் கமிஷனர் ஆபீஸில் இருந்தேன்..."

" சாரு...நீங்கள் மலேஷியாவில் 4 நாட்கள் பட்டினி என்றதுமே ஒருக்கணம் பதறிவிட்டேன்..."

" அது பற்றி நான் இப்போது எதுவும் பேசக் கூடிய மனநிலையில் இல்லை...நாம் அப்புறம் பேசலாம்..."

" இருந்தாலும் அந்த ஹலோவிலிருந்து அது நீங்கள் இல்லை ; வேறு ஏதோ ஆள் என்று தெரிந்து விட்டது. இருந்தாலும் பதறினது உண்மைதான்..."

" இதோடு இந்த விஷயம் பற்றி 500 பேர் பேசி விட்டார்கள். நான் எக்கச்சக்கமான மன உளைச்சலில் இருக்கிறேன். நீங்கள் வேறு டார்ச்சர் கொடுக்காதீர்கள். தயவு செய்து என் இணைய தளத்தைப் படித்துவிட்டுப் பேசுங்கள்..."

" ஓ , இணைய தளம் வேறு நடத்துகிறீர்களா ? அதன் முகவரி என்ன ?"

சொன்னேன்.

" ஓகே...பார்க்கிறேன் சாரு...புதிதாக இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ?"

" இதோ பாருங்கள் தாரா...நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை. நீங்கள் என் இணைய தளத்தைப் பார்த்துவிட்டு பிறகு பேசுங்கள்..."

" பார்க்கிறேன்...அப்புறம் அந்த மின்னஞ்சல் திருடனைப் பற்றி போலீஸில் புகார் செய்யுங்கள் சாரு..."

அந்த அறிவுரையைக் கேட்டதும் " Look... I dont want to talk to you now..." என்று உச்சஸ்தாயியில் குலைத்துவிட்டு அவந்திகாவிடம் போனைக் கொடுத்தேன்.

திருடனையே கண்டுபிடித்து விட்ட பிறகு போலீஸில் புகார் கொடுக்கச் சொல்லி அறிவுரை! இதைக் கேட்டவுடன் எனக்கு மயானக் கொல்லை பூசாரியின் நினைவே வந்தது. கிராப்புறக் கோவில்களில் மயானக் கொல்லை என்று ஒரு திருவிழா நடக்கும். அப்போது கோவில் பூசாரி ஆடு , மாடு , கோழி எல்லாவற்றின் கழுத்தையும் வாயாலேயே கடித்து ரத்ததைக் குடிப்பார்.

அவந்திகாவுக்குப் புரிந்து விட்டது நிலைமை. பயந்து போய் தாராவிடம் இரண்டொரு வார்த்தைகள் உளறி விட்டு போனை வைத்து விட்டு "சாரு இப்போது டிஸ்டர்ப்டாக இருக்கிறார் ; பிறகு பேசுகிறேன் என்று சொல்கிறார் தாரா" என்றாள். "என்னது , டிஸ்டர்ப்டாக இருக்கேனா ? இன்னும் ஒரு நிமிடம் நீ இங்கே நின்றால் நடப்பதே வேறு" என்று கத்தினேன்.

" ம்க்கும்...பெரிய இவன்னு நினைப்பு..."என்று பழிப்பு காட்டிவிட்டு நகர்ந்தாள் அவந்திகா. சூடு கொஞ்சம் தணிந்தது.

மறுநாள் காலைய சரியாக ஏழு மணிக்கு போன் செய்து "குட் மார்னிங் சாரு" என்றார் தாரா.

" குட் மார்னிங்."

" ஹெல்த் இப்போ எப்படி இருக்கு சாரு ?"

அந்த நேரத்திலும் என் ரத்த அழுத்தம் மேலே ஜிவ்வென்று எகிறியது.

" இன்னுமா நீங்கள் இணைய தளத்தைப் படிக்கவில்லை ?"

" இல்லே சாரு...நேரமே இல்லை...இப்போ உங்க ஹெல்த் எப்படியிருக்கு ? பரவால்லேல்ல ?"

" தாரா...உங்க கிட்ட நேற்றே சொன்னேன்...என் இணைய தளத்தைப் படித்துவிட்டுப் பேசுங்கள் என்று...ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று கூட இல்லை...உங்களிடம் லேப்டாப்பும் இருக்கு...இந்த தினசரிகளைப் பீராய்கிறோம் இல்லையா...எந்தப் பாலம் இடிந்து விழுந்து எத்தனை பேர் செத்தாங்க...எந்த மந்திரி ரேப் சார்ஜில் ராஜினாமா பண்ணினார்...எத்தனை விவசாயிங்க தற்கொலை செஞ்சுக் கிட்டாங்கன்னு தினமும் பார்க்கிறோம்ல..அப்படிப் பீராய்ந்தால் கூடப் போதும் , நான் என்ன செஞ்சுக் கிட்டிருக்கேன்னு தெரியும்...இணைய தளத்தில் உங்கள் கடிதம் கூட வெளியாகியிருக்கு..."

இந்த உரையாடல் முடிந்து சில மணி நேரம் சென்று தாரவிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

' எந்தக் கட்டுரையில் என் கடிதம் ?'

கட்டுரைத் தலைப்பைக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

ஒரு மணி நேரம் கழித்து தாராவிடமிருந்து வந்த குறுஞ்செய்தி இதோ:

" ஒரு வேண்டுகோள்:

கீழ்க்கண்டவைகளை தயவுசெய்து மாற்றுங்கள்:

ராம் பி.இ. இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.

நான் பிரின்ஸிபல் அல்ல ; டீன்."

என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு சுரணையற்ற , self-centred ஆன எதிர்வினையைச் சந்தித்ததில்லை என்றே சொல்லவேண்டும்.

தாராவுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:

ராமின் ஹைட் , வேய்ட் , பைஸப்ஸ் அளவு , இடுப்பு அளவு , அவனுடைய பொழுதுபோக்கு , அவன் படிக்கும் கல்லூரி முகவரி போன்ற விபரங்களையும் கொடுத்தால் இணைய தளத்தில் வெளியிட வசதியாக இருக்கும்.

***

கட்டுரையை முடித்து விடுகிறேன். இப்போது தாராவிடமிருந்து இரண்டு எதிர்வினைகளுக்கு சாத்தியம் இருக்கிறது. ஒன்று , அவர் இதைப் படிக்கப் போவதில்லை. (ஏனென்றால் , நான் இது பற்றி அவரிடம் சொல்வதாக இல்லை). இரண்டு , அவர் தப்பித் தவறி படிக்க நேர்ந்தால் மேலே நான் கேட்டுள்ள விபரங்களையும் அனுப்பி வைத்தாலும் வைப்பார்.

என்னைப் பாராட்டுகிறீர்கள் என்பதால் பதிலுக்கு என்னிடம் பாராட்டை எதிர்பார்க்காதீர்கள். நான் அப்படிப் பட்டவன் அல்ல. உங்கள் வாழ்விலும் சிந்தனையிலும் கொஞ்சமாவது சுரணையுணர்வோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் என்னைத் திட்டினாலும் நான் உங்களைப் பாராட்டுவேன்.

Source : http://www.charuonline.com/


எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை ?

“ Man is an idiot.

He does not know

how to do anything

without copying,

without imitating,

without plagiarizing,

without aping.

It might even have been

that man invented

generation by coitus

after seeing

the grosshoper copulate “

– Augusto Rao Bastos

பாரிஸ் நகரில் சார்லஸ் தெ கால் சதுக்கம் என்ற ஒரு இடம் இருக்கிறது. இந்த சதுக்கத்தை சுற்றி பாரிஸின் 12 பிரதான சாலைகள் ஒன்று சேர்கின்றன. (இந்தச் சாலைகள் ஒன்று, உலகப் புகழ் பெற்ற சாம்ப்ஸ் லீஸே ( Champs Elysees). இந்த 12 சாலைகள் ஒவ்வொன்றும் இருவழிச் சாலைகள் என்பதால் மொத்தம் 24 சாலைகள் என்று ஆகிறது. இந்தச் சதுக்கத்தின் விஷேசம் என்னவென்றால், இங்கே ஒரு போக்குவரத்து சிக்னல்கூடக் கிடைக்காது. பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று எந்த விளக்குகளும் கிடையாது. அதேபோல் இத்தனை சாலைகளும் ஒன்று கூடும் இந்தச் சதுக்கத்தின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஒரு போலீஸ்காரர்கூடக் கிடையாது.

கற்பனை செய்து பாருங்கள். இப்படிப் போக்குவரத்துப் போலீஸோ, ட்ராஃபிக் சிக்னலோ இல்லாமல் ஒரு சதுக்கம் இந்தியாவில் இருந்தால் என்ன ஆகும்? ஆனால், சார்லஸ் தெ கால் சதுக்கத்தில் அது அமைக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில் ஒரு விபத்துக்கூட நடந்ததில்லை.

இதேபோல், நெதர்லாந்திலுள்ள Drachten என்ற நகரம். இது 17ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது. இதன் விஷேசம் என்னவென்றால், இந்த நகரம் முழுவதிலுமே ஒரு போக்குவரத்து சிக்னல்கூடக் கிடையாது. மற்ற ஐரோப்பிய நகரங்களை விட இங்கே விபத்துகள் கு றைவு. இந்த நகரில் போக்குவரத்து சிக்னல்களை நீக்கிவிடலாம் என்று ஆலோசனை வழங்கியவர் Hans Modernman என்பவர்.

இது என்ன சாலைப் போக்குவரத்து பற்றிக் கட்டுரையா ? இல்லை. ஒரு மனித சமூகத்தின் கலாச்சார / நாகரிக வளர்ச்சியை அம்மனிதர்கள் தமது தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து அறிந்து கொண்டு விடலாம்.

நம்முடைய இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், ஒருவர் இங்கேயுள்ள நகரம் ஒன்றின் ட்ராஃபிக் சிக்னலில் கொஞ்ச நேரம் நின்று கவனித்தால் போதும்.

கனரக வாகனத்தை ஓட்டி வருபவருக்கு காரில் செல்பவர் கரப்பான் பூச்சியாகவும், காரில் செல்பவருக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர் கரப்பான் பூச்சியாகவும், மோட்டார் சைக்கிளில் செல்பவருக்கு சைக்கிளில் செல்பவர் கரப்பான் பூச்சியாகவும் தெரிந்து அக்கரப்பான் பூச்சிகள் நசுக்கித் தள்ளப்படுகின்றன. இந்த நிலையில் இவர்கள் எல்லோரையுமே கரப்பான் பூச்சிகளாகவும், மூட்டைப் பூச்சிகளாகவும் எண்ணி நசுக்கித் தள்ள படையெடுத்து வருகிறது அரசியல்வாதியின் கார் அணிவகுப்பு. கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு வீரர்களின் கார்கள், ஆம்புலன்ஸ், தீயணைக்கும் படை வீரர்கள்.... இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர முன்னும் பின்னுமாய் 30 வாகனங்கள் என்று செல்லுகிறார் ஒரு மாநில முதலமைச்சர். சாலையெங்கும் ஏதோ ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது போல் கொஞ்ச நேரத்திற்கு இயக்கமே ஸ்தம்பித்துப் போய் கிடக்கிறது. சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த மன்னராட்சியே தேவலாம் என்று நினைக்கும் அளவுக்குப் போய்விட்டது இந்திய மந்திரிகளின் ஜனநாயக ஆட்சி.

ஐரோப்பிய நாடுகளில் மந்திரிகள் பாராளுமன்றத்துக்கு சைக்கிளில் சென்று வருகிறார்கள். ஐரோப்பா வரை ஏன் போக வேண்டும் ? நமக்குப் பக்கத்தில் இருக்கும் சிங்கப்பூரில் காலை நேரத்தில் பூங்கா ஒன்றில் நானும் என் நண்பரும் வாக்கிங் சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்குப் பக்கத்தில் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு சீனாக்காரரைக் காண்பித்த என் நண்பர் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். பார்த்துக் கொண்டேன். அவர் நகர்த்தும் நண்பர் சொன்னார். “ அவர் தான் திரு. லீசியன் லூங், எங்க பிரதம மந்திரி “

சிங்கப்பூரிலும் சர். மற்ற வெளி நாடுகளிலும் சரி. நீங்கள் கண்ட இடங்களிலும் குப்பைகளைப் போடக் கூடாது. ( இந்த வீடு இந்தியாவிலும், அதன் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்கும் பொருந்தாது. இந்த நாடுகளில் நீங்கள் எந்த இடத்திலும் சிகரெட் துண்டைப் போடுவதிலிருந்து மலஜலம் கழிப்பது வரை என்ன அராஜகம் வேண்டு மானாலும் செய்து கொள்ளலாம்). சிங்கப்பூரில் சற்றுக் கெடுபிடி அதிகம். கண்ட இடத்தில் குப்பை போட்டால் அபராதம் விதித்து விடுவார்கள். அபராதமும் சற்று அதிகம்.

சிங்கப்பூரின் சுகாதாரம் பற்றி ஒரு சம்பவம். அங்கே ஹெளகாங்க் என்ற பகுதியில் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். ஒரு நாள் நான் வீட்டில் தனியாக இருக்கும் போது கதவு தட்டப்பட்டது. திறந்தால் ஒரு சர்தார்ஜி. சிங்கப்பூர் நகரசபையில் பணிபுரிபவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைய அனுமதி பெற்று வீடு முழுவதையும் இஞ்ச் இஞ்சாக பரிசோதனை செய்தார். பிறகு திருப்தியுடன் தலையாட்டி நன்றி கூறிவிட்டுக் கிளம்பினார்.

நான் அவரை “ ஏதாவது வெடிகுண்டு சோதனையா ? “ என்று கேட்டேன். கேட்கும் போதே ‘ வெடிகுண்டுக்கும் நகரசபைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ? ‘ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. அவர் சிரித்துக் கொண்டே ‘ அதெல்லாம் இங்கில்லை ’ என்று கூறி சற்று அவகாசம் விட்டு, ஹெளகாங்க் பகுதியில் ஒருவருக்கு ஜூரம் வந்து விட்டதாகவும், அது கொசு, ஈ போன்ற ஜந்துக்களால் பரவக் கூடியது என்பதால் ஹெளகாங்க் பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டின் உட்புறம் சுத்தமாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கவே தங்களுடைய குழு அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் விரிவாகக் கூறினார்.

அதாவது, நம்முடைய இந்தியர்கள் கூறுவதைப் போல் இது என் வீடு, என் வீட்டுக்குள் நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், இது என்னுடைய சுதந்திரம் என்று சிங்கப்பூரில் சொல்ல முடியாது.

நான் இருந்த வீட்டில் அந்த நகரசபை ஊழியர் சமையலறையைத்தான் முதல் முதலில் சோதனை செய்தார். பிறகு குப்பைக் கூடைகள். குப்பைக் கூடை என்றால் அதை கச்சடாவாகவும், கக்கூஸ் என்றால் அதைப் பொது கக்கூஸைப் போலவும் ஆபாசமாக வைத்திருக்க அங்கே யாருக்கும் அனுமதி இல்லை. சமையலறைக் கழிவுகளைக் கூட வெளியே தெரியாமல் ஒரு பையில் போட்டுக் கட்டி வைத்திருக்க வேண்டும்.

என் வீட்டுச் சமையலறையையோ, கழிவறையையோ அசுத்தமாக வைத்திருந்தால் அதன் மூலம் பரவும் கிருமி என் பகுதியில் வாழும் மற்றொருவரின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது. இந்தப் புள்ளியிலிருந்துதான் கலாச்சாரமும், ஜனநாயகமும் ஆரம்பிக்கின்றது. அதை இந்திய உபகண்டத்தில் வசிப்பவர்களைத் தவிர, உலக மக்கள் யாவரும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இன்னும் ஒரு படி மேல். அங்கே நம்முடைய வீட்டுக் குப்பைகளைத் தர வாரியாகப் பிரித்து நாமே நான்கைந்து பைகளில் போட்டுக் கட்டிவிட வேண்டும். உதாரணமாக போத்தல், தகரம் போன்றவற்றுக்கு ஒரு பை. முட்டை, மாமிசக் கழிவு போன்ற அசைவ சமாச்சாரங்களுக்கு ஒரு பை. சிகரெட் குப்பைகளுக்கு ஒரு பை. ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு ஒரு பை. ஒரே ஒரு சலுகை என்னவென்றால், பழைய டிவி, பழைய கம்ப்யூட்டர் போன்ற சாமான்களை அப்படி அப்படியே கொண்டு வந்து வைத்து விடலாம். ப்ளாஸ்டிக் பைகளுக்குள் போட்டுக் கட்ட வேண்டிய தேவையில்லை.

இந்திய சுகாதாரத்திலேயே ட்ரெய்னிங் எடுத்திருந்த நான் நண்பரைக் கேட்டேன். பைகளைக் குப்பைத் தொட்டியில் தானே கொண்டு போய் வைக்கப் போகிறோம் ? பைகளில் நம்முடைய விலாசமா இருக்கிறது ? எனவே, மாமிசக் கழிவையும் போத்தலையும் ஒரே கவரில் போட்டுக் கொண்டு போய் வைத்து விட்டால் எவனுக்குத் தெரியப் போகிறது ?

” அப்படி வைத்தால் அடுத்த நாளே பாரிஸின் நகரசபை அதிகாரி வந்து நம் கதவைத் தட்டுவார் “ என்றார் நண்பர்.

எப்படியென்றால், குப்பைப் பைகளைப் பார்த்தாலே அவன் எந்த நாட்டுக்காரன் என்று தெரிந்து விடும். உதாரணமாக, இலங்கைத் தமிழர் விஸ்கிதான் குடிப்பார். ( விஸ்கி குடித்துக் குடித்து ஐம்பது வயதிலேயே மேலே போய் விடுவார். அது தனிக்கதை. சந்தேகமிருந்தால், அவ்வப்போது தமிழ்ப் பத்திரிக்கைகளில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் அகால மரணம் பற்றிய செய்திக் கட்டுரைகள் புகைப்படத்தோடு வரும்போது அன்னாரின் வயது என்ன என்பதைக் கவனியுங்கள். ஆனால் ஃப்ரெஞ்சுக்காரர்கள் குடிப்பது ஒயின் ( சராசரி வயது 95க்கு மேல்). இது தவிர, குப்பைப் பையில் இருக்கும் உணவு மிச்சங்களை வைத்தும் இன்னார் வீடு என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள். குப்பைப் பையில் குஸ்குஸ் உணவின் மிச்சம் இருந்தால் அது மொரோக் ( Moroccan ) வீடு. தோல்மாவின் மிச்சமிருந்தால் அது நிச்சயமாக துருக்கிக்காரன் வீடு.

இவ்வாறான சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக சிங்கப்பூரில் கொசுவே இல்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் சிங்கப்பூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியிருக்கும் கடலை ஃபெர்ரியின் மூலம் கடந்தால் நூற்றுக்கணக்கான கொசுக்களையும், குப்பைக் கூளம், சாக்கடை, கூச்சல் என்ற சகல சம்பத்துகளையும் சந்திக்கலாம். அந்த ஊரின் பெயர் ஜொஹர் பஹ்ரு. மலேஷியா.

ஜொகர் பஹ்ரு செல்லும் போதெல்லாம் இது எனக்குப் புரியாத விந்தை. ஒரே ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு ஊரில் ஒரு கொசு கூட இல்லாமல் இருப்பதும், மற்றொரு ஊரில் கொசுத் தொகை பெருத்துக் கிடப்பதும்.

கொசு என்றதும் சீனாவின் ஞாபகம் வருகிறது. புரட்சிக்கு முந்தைய சீனாவில், மக்களின் பெரும் பிரச்சினையாக இருந்தது கொசுவும், மலேரியாவும். மக்கள் கொசு வலை கூட இல்லாமல் மலேரியாவினால் கூட்டம் கூட்டமாக செத்துக் கொண்டிருந்தனர். அப்போது மாவோவின் புரட்சி வெற்றியடைந்த பின் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய எட்கார் ஸ்நோ, மாவோவிடம் ஒரு கேள்வி கேட்கிறார். “ சேர்மன், நீங்கள் புரட்சிக்காரராக இருந்ததற்கும், இப்போது சீனாவின் அதிபராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் ? “

இதற்கு மாவோ சொன்ன பதில், “ ஒரே ஒரு வித்தியாசம்தான்.... இப்போது தோழர்கள் எனக்கு ஒரு கொசு வலை கொடுத்திருக்கிறார்கள் “. இது புரட்சி முடிந்த உடனே நாம் கண்ட மாவோ. அதன் பின்னர் மாவோவும் மாறி, சீனாவும் மாறி விட்டது வேறு கதை. ஆனால், மாவோவின் சர்வாதிகாரத்தில் அவர் தனிமனித சுதந்திரத்தை அழித்ததுபோல், நூற்றாண்டுகளாக சீன மக்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருந்த கொசுக்களையும் அழித்துவிட்டார்.

இப்போது மீண்டும் சிங்கப்பூருக்கு வருவோம். சுகாதாரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் சாலை விதிகளுக்கும் அளிக்கப்படுகிறது. சாலை விதிகளை மீறினாலும் சிங்கப்பூரில் கடுமையான அபராதம் உண்டு. அப்பேர்ப்பட்ட சிங்கப்பூரில் இந்தியர்கள் வாழும் பகுதி ஒன்று உண்டு. அதன் பெயர் லிட்டில் இந்தியா. மிக அழகிய நகரமான சிங்கப்பூரில் அந்த லிட்டில் இந்தியா என்ற இடம் மட்டும் நம்முடைய சிந்தாதிரிப்பேட்டை மாதிரி இருக்கும். வெற்றிலைப் பாக்கு போட்டு மென்று எங்கே வேண்டுமானாலும் சிவப்பு சிவப்பாகத் துப்பி வைக்கலாம். பஸ் டிக்கெட், பாப்கார்ன் கவர், சாக்லெட் தாள் என்று சகல விதமான குப்பைகளையும் அப்படி அப்படியே போடலாம். பச்சை, சிவப்பு விளக்குகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை. லிட்டில் இந்தியாவுக்குள் நுழைந்தால் சிங்கப்பூரிலேயே ஒரு மன நோய் விடுதிக்குள் நுழந்து விட்டது போன்ற உணர்வு வருவதினின்றும் நீங்கள் தப்பிக்கவே முடியாது.

சிங்கப்பூர் அரசு இதை எப்படி விட்டு வைத்திருக்கிறது என்று நண்பரிடம் கேட்டேன். எத்தனை பேருக்குத்தான் அபராதம் போடுவது ? சிங்கப்பூரில் இந்தியர்களின் ஜனத்தொகை அதிகம். அவ்வளவு பேரைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு சிங்கப்பூரில் போலீஸ் கிடையாது. எனவே, லிட்டில் இந்தியா என்ற இந்தப் பகுதியில் மட்டும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் என்று சிங்கப்பூர் அரசு ‘ இந்தியர்களைத் தண்ணீர் ‘ தெளித்து விட்டுவிட்டது.

சமீபத்தில் நான் ஒரு அப்பர்மிடில்கிளாஸ் பகுதியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன். அப்போது மேல் மாடியில் குடியிருந்த வீட்டிலிருந்து பெண்களின் மாதவிடாய்த் துணி வந்து விழுந்து கொண்டிருந்தது. சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. மேலும், அந்தப் பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையும் அடைத்துக் கொண்டு தெருவெங்கும் அரை அடி உயரத்துக்கு சாக்கடை நீர் நரகலுடன் ஓடிக் கொண்டிருந்தது. எனக்குள்ள குறைந்த பட்ச செல்வாக்கைப் பயன்படுத்தி நகரசபைத் துப்புரவுத் தொழிலாளர்களை அழைத்து வந்தேன். அந்த மனிதர்கள் பாதாள சாக்கடைக்குள் முக்கி எழுந்தார்கள். ( இது போன்ரு மனிதர்களே சாக்கடைக்குள் முக்கி எழும் அவலமும் உலகத்திலேயே வேறு எங்கும் இருக்காது. மனித மலத்தைத் தலையில் சுமக்கும் அவலத்தைவிட கொடூரமானது பாதாள சாக்கடையில் மனிதர்கள் முக்கி எழுவது )

முக்கி எழுந்து தலையிலிருந்து கால் வரை சாக்கடையும் நரகலும் வழிந்தோட அந்தத் தொழிலாளர்கள் கூறியது “ வழிகளையெல்லாம் பெண்களின் தூரத் துணி அடைத்துக் கொண்டிருக்கிறது “

இந்தப் பிரச்சினையால் கடும் அல்லலுற்ற நான் சமீபத்தில் வீட்டையே விற்றுவிட்டு தெற்குச் சென்னையில் வந்து குடியேறினேன். ஒரு நாள் வீட்டுக்கு அருகிலிருக்கும் கடற்கரையை அதிகாலையில் பார்த்து ரசிக்கலாம் என்று என் மனைவி அவந்திகாவையும் அழைத்துக் கொண்டு ஆறு மணிக்கு வாக்கிங் சென்றேன்.

அந்த அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். என் வாழ்வில் ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சிகளில் முதன்மையானது அதுதான். மெரினா கடற்கரை உலகின் பெரிய கடற்கரைகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது. அவ்வளவு பெரிய மணல் பரப்பு முழுவதும் லட்சக்கணக்கான பாலிதீன் கவர்களும், சோளக் கதிர் கட்டைகளும் இன்ன பிற அசிங்கங்களும் நிரம்பிக் கிடந்தன.

கற்பனையில் யூகித்துப் பாருங்கள். ஐந்தாறு கிலோமீட்டர் பரப்பில் ஒரே குப்பைக் காகிதங்களாகவே சிதறிக் கிடக்கும் காட்சியை. அது ஒரு திங்கட்கிழமை காலை. எனவே, முந்தின விடுமுறை தினத்தில் மெரினா கடற்கரைக்கு வந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும் தின்று விட்டுப் போட்ட குப்பைதான் அது. சாதாரண ஞாயிறுகளில் 3 லட்சம், பண்டிகை தினங்களில் 7 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுகிறார்கள்.

இந்த அதிர்ச்சி சாதாரணம். இதைத் தொடர்ந்து வந்த அதிர்ச்சிதான் இன்னும் பயங்கரமானது. இந்தக் குப்பையைப் பார்க்க மனம் சகிக்காமல் நானும் அவந்திகாவும் கடலின் அருகே சென்றோம். அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே மலக்காடாக கிடந்தது. பின்னர், நண்பர்களிடம் இது பற்றிப் புலம்பிக் கொண்டிருந்த போது எம்ஜியார் சமாதியிலிருந்து பெசன்ட் நகர் மாதா கோவில் வரை ஒரே மலக்காடுதான் என்றார்கள். மலஜலம் கழிப்பதை மக்கள் இன்னும் முடித்திருக்கவில்லை. தொடர்ந்து அந்தக் காரியம் நடந்த வண்ணமே இருந்தது.

நானும் அவந்திகாவும் தலை தெறிக்க வீட்டுக்கு ஓடி வந்தோம். இதெல்லாம் வெளிக்குப்பை என்றால், உள்குப்பை இதைவிட இன்னும் பயங்கரம். கணினியுகம் தோன்றி திடீரென்று நிகழ்ந்த தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக அதிரடியான சமூக மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன.

இதம் முழுப் பயனை அனுபவிப்பது இளைய சமுதாயம். அதிலும் குறிப்பாக, இளம்பெண்கள். இது நாள் வரை, மிகக் குறுகலாக்கப்பட்ட சமூக வெளியில் (அடுப்பங்கரை அல்லது ஆஃபீஸ் அல்லது இரண்டும்) புழுங்கிக் கொண்டிருந்த பெண்களுக்கு இன்று மிகப் பரந்த உலகம் கண்முன்னே விரிந்து கிடக்கிறது. ‘சூரியன் மறைந்து இருள் கவியத் துவங்குவதற்குள் தங்கள் புத்திரிகள் வீட்டுக்குள் வந்து அடைந்து விட வேண்டும்; இல்லாவிட்டால் அவர்களின் கற்புக்கு ஆபத்து ’ என்று எண்ணி அதை நடைமுறைப் படுத்தி வந்த மத்திய தர வர்க்கம் இன்று தங்கள் பெண்கள் இரவு 7 மணிக்கு ஆஃபீஸ் சென்று, காலை 5 மணிக்குத் திரும்பி, பகல் முழுதும் உறங்கி மாலையில் கண் விழிப்பதை வாய் பொத்தி பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், தங்கள் செல்வ புத்திரிகள் இராக் கண் விழித்து, அமெரிக்க வாடிக்கையாளர்களுடன் பேசி, கொண்டு வந்து கொடுக்கும் 40 ஆயிரம், 50 ஆயிரம் என்ற சம்பளப் பணம்.

இந்த அபரிமிதமான பணம் இன்றைய இளம் பெண்களுக்கு எண்ணற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பது உண்மை. இதன் மூலம் காலம் காலமாக ஆண்களை எதிர்பார்த்துக் கிடந்த பெண்களின் அடிமைத்தனம் உடைந்து விட்டது. இன்று காலம், வெளி இரண்டும் பெண்ணின் கைவசப்பட்டு விட்டது. பொருளாதார ரீதியாகவும் விடுதலை கிடைத்து விட்டது. இது இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்குக் கிடைத்த அனுகூலம் என்றால், இதன் மறுபக்கமாக மிகப் பெரியதொரு வீழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பொருளாதார விடுதலையை அனுபவிப்பது நகர்ப்புற நடுத்தர வர்க்கம் மட்டுமே. சமீபத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நான் கண்ட காட்சி. மதியம் ஒரு மணி இருக்கும். ஒரு 70 வயதான முதியவர் கல் உடைத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் நின்று 10 நிமிடம் கவனித்தேன். அவர் பாட்டுக்கு இயந்திரத்தைப் போல் உடைத்துக் கொண்டேயிருந்தார். அவரை நெருங்கி “ எவ்வளவு கூலி ? “ என்று கேட்டேன். “ 50 ரூபாய் ” என்றார்.

இது ஒரு பக்கமிருக்க தகவல் தொழில் நுட்ப புரட்சியால் ஏற்பட்ட அனுகூலங்களோடு கூடவே நடந்த வீழ்ச்சிகளில் ஒன்று, ஆண் பெண் உறவுகளின் சிதைவு என்று சொல்லலாம். எங்கோ கண் காணாத தேசத்திலிருக்கும் ஒரு ஆடவனோடு ASL ( Age, Sex, Location ) என்ற மூன்று விபரங்களை மட்டும் பெற்றுக் கொண்டு லட்சக்கணக்கான வார்த்தைகளை அந்த ஆணும் பெண்ணும் பரிமாறிக் கொள்கின்றனர். இந்த லட்சக்கணக்கான வார்த்தைகளில் எத்தனை சதவிகிதம் உண்மை, எத்தனை சதவிகிதம் பொய் என்று இருவருக்குமே தெரியாது. அநேகமாக முக்கால்வாசி பொய்யாகவே இருக்கும்.

பெல்ஜியத்திலிருந்து ஒரு பெண் சாட்டில் வந்து “ ஜி ஸ்பாட் “ என்றால் என்ன ? என்று என்னைக் கேட்டால். விளக்கம் கூற ஆரம்பித்ததில் இரண்டு மணி நேரம் கடந்து போய் ஒரு Virtual கலவியே நடந்து முடிந்து விட்டது.

வெப்கேம் என்ற ஒரு சாதனத்தின் வழியே எதிராளியின் நிர்வாண உடலைப் பார்த்துக் கொண்டே சுய போகத்தில் ஈடுபடும் இளைஞர் சமூகம், இன்று பாலியல் உறவு என்பதை சொற்களாகவும், காட்சியாகவும் பதிலீடு செய்திருக்கிறது.

பாலியல் சுகம் என்பது ஸ்பரிச சம்பந்தத்திலிருந்து விலகி வெறும் வார்ததைக் கட்டமாக உருமாறியிருக்கிறது. காதல் என்பது வெறும் சரீர இச்சையாய் மாறி பெண்ணின் பாலுறுப்பு ஆணின் விந்தை வாங்கிக் கொள்ளும் கழிவறையாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் தேசம், இனம், மொழி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் இளைஞர் சமுதாயம் ஒரே விதமான வார்த்தைகளால் தங்கள் சரீர இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள முயன்று தோல்வி அடைந்து கொண்டிருக்கின்றன.

இங்கே வார்த்தைகள் என்பது முக்கியம். நீ, வா, போ, செல்லம், ச்சோ ச்வீட் என்கிறாற்போல் மொத்தம் 200 வார்த்தைகள் இருக்கலாம். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இந்த 200 வார்த்தைகள்தான் மாறி மாறிப் புழங்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, பெரூ தேசத்தில் லிமா நகரில் சாட் செய்யும் ஒரு இளைஞனின் என்பஞோல் வார்த்தகளும் சென்னையில் அமர்ந்து சாட் செய்யும் ஒரு யுவதியின் ஆங்கிலம் அல்லது தமிழ் வார்த்தைகளும், மொழி பெயர்த்துப் பார்த்தால் ஒரே வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

உதாரணமாக, என் உறவினர் வீட்டின் கணினி ஒன்றில் சந்தர்ப்பவசமாக அமர்ந்த போது ஒரு கணினி உரையாடலைக் காண நேர்ந்த்து. நான் ஒரு சமயம் என்னுடைய ஜப்பானியத் தோழியுடன் அடித்த அதே அரட்டை மொழிகள்; அச்சு அசலாக அதே வார்த்தைகள். ஆங்கிலத்துக்குப் பதிலாக தமிழ். அந்த இளைஞனுக்கு வயது 20 இருக்கலாம். இவ்வாறாக, இருநூறே வார்த்தைகள் கோடிக்கணக்கான தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு இந்தக் காற்றில் அலைந்து கொண்டிருக்கின்றன.

கணினி போதாதென்று, கைத்தொலைபேசி வழியாகவும் இந்த வெற்று வார்த்தைகள் பரிமாறப் பட்டு வருகின்றன. காதருகே கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டிராத எந்த ஒரு இளம் பெண்ணையும் என்னால் காண முடியவில்லை.

ஒரு நாள் நடு இரவு ஒரு மணிக்கு மேல் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். முன்பின் தெரியாத ஒரு இளம்பெண்ணுக்கு லிஃப்ட் கொடுக்க வேண்டி வந்தது. அந்தப் பெண் காரில் வந்த அரைமணி நேரமும் விடாமல் தன் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டே வந்தாள். விடைபெறும் போது கூட பேச்சை விடவில்லை.

காலை ஐந்து மணிக்கு பார்க்கில் நடந்து கொண்டிருக்கும் போது, கூடவே நடக்கும் பெண் கைத்தொலைபேசியை அந்த ஒரு மணி நேரமும் காதிலேயே வைத்தபடி பேசிக் கொண்டே நடக்கிறாள்.

இப்படி சாலையைக் கடக்கும் போதும், பஸ்ஸிலும், ரயிலிலும், உணவருந்தும் போதும், ஏன் கவுண்டரில் அமர்ந்து ஒரு வாடிக்கையாளருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது கூட இளம் பெண்கள் கைத்தொலைபேசி மூலம் ஏற்கனவே சொன்ன அந்த 200 வார்த்தைகளாலான வாக்கியங்களையே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கின்றனர்.

காரல் மார்க்ஸ் சொன்ன எட்டு மணி நேர உழைப்பு காணாமல் போய் இந்தக் கணினி யுக இளைஞர்கள் 18 மணி நேரம் உழைக்கிறார்கள். அலுப்பையும் சோர்வையும் போக்கிக் கொள்ள ஒரு நாள் குடிக்கிறார்கள்.

ஒவ்வொரு மனித வாழ்க்கையும் உள்ளீடற்ற வெற்று வார்த்தைக் கூட்டங்களாக மாறி அலைகின்றன. தனிமையை விரட்ட ஏதேதோ செய்கிறார்கள். Colouring என்ற ஒன்று. தலைமயிரை வண்ணமடித்துக் கொள்வது. இதற்குக் குறைந்த பட்ச செலவு ரூ. 2000. Straightening என்ற ஒன்று. தலை மயிரை முள்ளம் பன்றியைப் போல் மேல் நோக்கி நீட்டச் செய்வது. இதற்குக் குறைந்த பட்ச செலவு ரூ.3000. இஸ்பஹானி சென்டரில் உள்ள பெளன்ஸ் என்ற கடை சென்னை வாழ் இளைஞர்களிடையே இன்று மிகவும் பிரபலம்.

பாதி ஜட்டி வெளியே தெரிய தொப்புளிலிருந்து கீழே ஒரு சாண் இறங்கியிருக்க வேண்டும் ஜீன்ஸ். பெண்ணாக இருந்தால் ஆணுக்குப் பின்னே பைக்கில் காலத்தூக்கிப் போட்டு அமர்ந்தால் புட்டம் முழுவதும் வெளியே தெரியவேண்டும். பேண்டீஸ் என்பது வெறும் ஒரு நூல் கயிறு தான். வட்டமாக ஒரு மெல்லிய கயிறு. இந்த வட்டத்தில் இரண்டு முனைகளிலிருந்து ஊஞ்சல் போல் தொங்கும் மற்றொரு மெல்லிய கயிறு. இந்த நூல் கயிற்றின் விலை ரூ.500.

இவ்வைகையான வாழ்க்கை முறையின் பிறப்பிடம் அமெரிக்கா. அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட இந்தக் கலாச்சார அவலம் இன்று உலகம் பூராவும் பரவி விட்டது. ஐரோப்பா மட்டுமே விதி விலக்கு. ஃபிரான்ஸின் கிராமப் புறங்களில் இன்னமும் ரயிலில் ஏறுவதற்குப் பயப்படும் பெண்களை நான் சந்தித்திருக்கிறேன்.

இன்றைய கால கட்டத்தின் ஆன்மீக வீழ்ச்சிக்கும், உலகின் ஆன்மீக வறட்சிக்கும் சாட்சியாக விளங்குவது அமெரிக்கா. இதற்கு ஒரே உதாரணம் தருகிறேன்.

ஒரு அமெரிக்க மருத்துவமனை. ஒரு விபத்தில் வலது கை துண்டாகிப் போன ஒருவன் வலியால் அலறித் துடித்த படி இடது கையால் தனது மருத்துவக் காப்பீட்டுப் படிவத்தை மிகுந்த சிரமத்துக்கிடையே பூர்த்தி செய்து கொண்டிருக்கிறான். பூர்த்தி செய்யாவிட்டால் மருத்துவ உதவி கிடைக்காது. இதைவிடக் கோரமான காட்சிகளை இந்திய நாட்டின் அரசு மருத்துவமனைகளில் ஒருவர் பார்க்க முடியும். இதைத்தான் ஆன்மீக வறட்சி என்று கூறினேன்.

அமெரிக்காவை தனது மாடலாகக் கொண்ட இந்திய இளைஞர் சமூகம் இத்தகையதொரு ஆன்மீக வறட்சியில் தான் இன்று சிக்கிக் கொண்டிருக்கிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் திபெத்திய புத்த பிக்குகள் எட்டாவது பெரும் பாவம் என்று கருதப்பட்ட திரிஸ்தித்தியாவினால் (சோகம்) பாதிக்கப்பட்டனர். திரிஸ்தித்தியாவை உண்டாக்குவது boredom. ஒரு பிக்கு ஒரு தேவதையை வசப்படுத்தி அதனிடம் தன் பிரச்சினையைக் கூறினான். அவன் திரிஸ்தித்தியாவினால் அவதிப்படும் போதெல்லாம் அந்த தேவதை அவனை வெளியே அழைத்துச் சென்றது. கண்காணாத தூர தேசங்களுக்கெல்லாம் அவனை அழைத்துச் சென்றது அந்த தேவதை. அங்கேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றும். ஆனால் மடாலயத்துக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்து விடும். ஆனால் ஆச்சரியகரமாக இந்தப் பயணங்களெல்லாம் அவனுடைய திரிஸ்தித்தியாவைக் குறைப்பதற்க்கு பதிலாக அதிகப்படுத்தவே செய்தது. இப்போது அவனுடைய boredom இன்னும் தீவிரமாகி அது ஒரு ontological தன்மையை அடைந்தது. துக்கத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டான் அந்த பிக்கு. இப்போது அந்த தேவதையுடன் வெளியே செல்லும் ஒவ்வொரு பயணமும் அவனது துக்கத்தை அதிகரிப்பதாகவே இருந்தது. இந்த நிலையில் அவனுக்கு அந்த மடாலயமும், சக பிக்குகளும், பிரார்த்தனையின் போது கிடைக்கும் தெய்வத்தின் தரிசனமும் எல்லாமே ஒரு மாயத் தோற்றமாகத் தெரிய ஆரம்பித்தது. அவனது உலகம் கேளிக்கை என்ற விஷத்தின் மூலமாக வெற்றிடமாக்கப்பட்டது. இதன் பிறகு 1200 ஆண்டுகள் கழித்து ஃபிரான்ஸில் பாஸ்கல் என்ற ஒருவர் . Pensees என்ற நூலை எழுதினார். அதில் கேளிக்கை என்ற ஒரு அத்தியாத்தில் அவர் பின்வருமாறு எழுதினார்.

மனிதனின் எல்லாத் தீமைகளும் அவனுடைய ஒரே ஒரு தன்மையிலிருந்து தான் உருவாகின்றன. அந்த ஒரே ஒரு தன்மை என்னவென்றால், அவனால் ஒரு தனி அறையில் தனித்து இருக்க முடியாது என்ற இயலாமைதான்.

சென்ற ஆண்டு ( 2006 ) கிறிஸ்துமஸ் சமயத்தில் ஃபிரான்ஸிலுள்ள லூர்து மாதாவை தரிசிக்க் ஒரு யாத்திரை மேற்கொண்டேன். தெற்கு ஃபிரான்ஸின் கோடியில் ஸ்பெய்ஸ் எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிற்றூர் லூர்த். நான் லூர்துக்கு 170 கி.மீ. தூரத்திலுள்ள துலூஸ் என்ற நகரில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நண்பருடன் லூர்த் சென்றேன். கிறிஸ்துமஸ் தினம். அப்போது எனக்கு பாவ்லோ கோயலோவின் ஞாபகம் வந்தது. அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். அவர் அங்கேதான் லூர்துக்குப் பக்கத்தில் ஸந்த் மர்த்தீன் என்ற கிராமத்தில் தங்கியிருப்பதாக அறிந்திருக்கிறேன். ஸந்த் மர்த்தீன் லூர்திலிருந்து 15 கி.மீ. தூரம்தான் என்பதால் அவரைச் சந்திக்கலாம் என்று கிளம்பினோம். முன் கூட்டியே அவரிடம் சந்திப்பு குறித்து அனுமதி பெற்றிருக்கவில்லையெனினும் ஒரு நப்பாசையால் சென்றோம். பல மைல் விஸ்தீரணத்துக்குப் பரந்திருக்கும் புல்வெளியின் நடுவே ஒரு சிறிய வீடு. வீடு பூட்டியிருந்தது. கிறிஸ்துமஸூக்கு அவரும் எங்காவது கிளம்பியிருக்கலாம். ஸந்த் மர்த்தீன் ஒரு கிராமம் தான் என்றாலும் கூட பக்கத்து வீடே ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. ஸந்த் மர்த்தீனில் ஒரு பேக்கரி கூட கிடையாது. ப்ரெட் வாங்க வேண்டும் என்றாலும்கூட பாவுலோ கோயலோ 15 கி.மீ. தாண்டி லூர்துக்குத்தான் செல்ல வேண்டும். மனிதர் ஒரு டி.வி. பெட்டியுடனும் (500 சேனல்களாம்) கணினியுடனும் தன்னந்தனியாக அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ஒரே பொழுதுபோக்கு வில்வித்தை பழகுவது.

சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பனி போர்த்த மலைகள். கிறிஸ்துமஸ் மரங்கள் வெண் பனியைப் போர்த்திக் கொண்டிருந்தன. சாலையோரத்தில் பயணிகள் ஓய்வெடுக்க பெஞ்சுகளும் நிழற்குடைகளும் இருந்தன. அங்கே அது நிழற்குடை அல்ல. பனிக்குடை என்று சொல்ல வேண்டும். பஞ்சுப் பொதிகளாய் ஸ்நோ விழுந்து கொண்டிருந்தது. ஐரோப்பாவில் ஸ்நோ விழாமல் கிறிஸ்துமஸே இல்லை.

மதியம் மணி மூன்று இருக்கும். நண்பர் “ மது அருந்தலாமா ? “ என்று கேட்டார். நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு மெதுவாக நடந்து பாவுலோ கோயலோவின் வீட்டுப் புல்வெளிக்கு வந்து அமர்ந்தேன். பனியால் நண்பரின் உருவம் நிழலைப் போல் தெரிந்தது.

கண்களை மூடினேன். வாழ்வில் முதல் முறையாக விழித்திருக்கும் போதே கண்களை மூடியது அப்போது தான். வித்தியாசமாக இருந்தது. பனி சூழ்ந்த ஒரு சாலையில் தனியே சென்று கொண்டிருக்கும் ஒரு பனி உருவம். பிறகு, பனி அந்தச் சாலையை முழுமையாகப் பார்வையிலிருந்து மறைத்தது. எங்கும் ஒரே வெண்மை. அப்போது என் மனம் என்னிடம் ஏதோ பேசியது. உன்னிப்பாக கவனித்தேன். உன் கண்களை உற்று நோக்கு என்றது மனம். மனதின் குரல் ஒரு உபதேசியின் குரலைப் போலிருந்தாலும் பேச்சு என்னவோ கிசுகிசுப்பான் தொனியிலிருந்தது. அந்தக் குரலின் சொல் வழி தொடர்ந்தேன். கருணை என்ற வார்த்தை சுவாசத்தில் ஓடியது. அதன் பின்பு மனம் என்னைச் செவிகளின் அருகே அழைத்துச் சென்று ஞானம் என்றது. சிறிது நேரம் அமைதிக்குப் பின்னர், என்னை வாயின் பக்கம் கொண்டு வந்து பொறுமை என்றது. புரிந்து கொண்டு மெளனமானேன். அதன் பிறகு எந்த சப்தமும், எந்த அசைவும் இல்லாத பூரண மெளனம். எவ்வளவு நேரம் கடந்ததென்று தெரியவில்லை. திடீரென்று பிரக்ஞை திரும்பிய போது மனம் என் இதயத்தை ஸ்பரிசித்து அன்பு, அன்பு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது.

கண் விழித்தபோது நண்பர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். “ நீங்கள் போய் ஒன்றரை மணி நேரமாகிறது. பயந்தே போனேன். இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? “ என்று கேட்டார் நண்பர்.

” சும்மா இருந்தேன் “ என்றேன் அவரிடம். துலூஸூக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது ” நீங்கள் மதுபானத்தில் விருப்பமுள்ளவராயிற்றே ? ஏன் சாப்பிடவில்ல ? “ என்று கேட்டார் நண்பர்.

அவருக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தேன்.

ஒரு ஊரில் ஒரு ஆள் தாசி வீடே கதி என்று கிடந்தான். எல்லா தாசி வீட்டுக்கும் போகாமல் தேவதேவி என்ற ஒரே தாசியிடம் அடிமையாய்க் கிடந்தான். அவள் நடந்து சென்றால் அவளுக்கு நிழல் வேண்டுமென, குடையை அவள் முகத்துக்கு நேரே நின்றபடி பிடித்துக் கொண்டு பின்னோக்கி நடப்பான் அந்த தாசன். ஊராரின் பரிகசிப்பைப் பற்றி அவன் சிறிதும் கவலைப்படவில்லை.

ஒரு நாள் அந்த ஊருக்குத் தன் சீடர்களுடன் வந்து சேர்ந்தார் ஸ்ரீராமானுஜர். சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இப்படி வினோதமான முறையில் ஒரு பெண்ணுக்குக் குடை பிடித்துக்கொண்டு போகும் அவனைப் பார்த்து ஆச்சரியமுற்று சீடர்களிடம் அவன் யாரென வினவினார். அவர்கள் விபரம் சொல்லவே, அவனை நான் பார்க்க வேண்டுமே என்று கேட்டார் உடையவர்.

அழைத்து வரப்பட்டான் அந்த் தாசன். “ ஏன் இப்படிச் செய்கிறீர் ? “ என்று கேட்ட ராமானுஜரிடம் அவன், “ நீங்களாக இருந்தாலும் அப்படித்தான் குடை பிடிப்பீர்கள். அந்தப் பெண்ணின் கண்களின் அழகு அப்படி. அவ்வளவு அழகிய கண்களை நீங்கள் இந்த உலகிலேயே காண முடியாது “ என்கிறான் தாசன்.

உடனே ராமானுஜர் “ அந்த ஸ்த்ரீயின் கண்களைவிட அழகிய கண்களை நான் உமக்குக் காண்பித்தால் என்ன செய்வீர் ? “ என்று கேட்டார். அதற்கு தாசன் இவளை மறந்து விட்டு அந்தக் கண்களை உடையவருக்கு அடிமையாகி விடுவேன் என்கிறான்.

ஸ்ரீராமானுஜர் அந்த தாசனுக்குக் காண்பித்த கண்கள் சாட்சாத் ஸ்ரீமந்நாராயணனுடையது. அவ்வளவுதான். அந்த தாசர் பின்னாளில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகி தொண்டரடிப் பொடி ஆழ்வார் என அழைக்கப்பட்டார். கதையைச் சொல்லி முடித்து விட்டு, “ கண்களை மூடி மனதின் குரலைக் கேட்கத் துவங்கினால் தனிமை என்ற நோயின் பிடியிலிருந்து மீள முடியும் “ என்றேன்.