எங்கே செல்கிறது இந்த வாழ்க்கை ?

on Tuesday, April 7, 2009

“ Man is an idiot.

He does not know

how to do anything

without copying,

without imitating,

without plagiarizing,

without aping.

It might even have been

that man invented

generation by coitus

after seeing

the grosshoper copulate “

– Augusto Rao Bastos

பாரிஸ் நகரில் சார்லஸ் தெ கால் சதுக்கம் என்ற ஒரு இடம் இருக்கிறது. இந்த சதுக்கத்தை சுற்றி பாரிஸின் 12 பிரதான சாலைகள் ஒன்று சேர்கின்றன. (இந்தச் சாலைகள் ஒன்று, உலகப் புகழ் பெற்ற சாம்ப்ஸ் லீஸே ( Champs Elysees). இந்த 12 சாலைகள் ஒவ்வொன்றும் இருவழிச் சாலைகள் என்பதால் மொத்தம் 24 சாலைகள் என்று ஆகிறது. இந்தச் சதுக்கத்தின் விஷேசம் என்னவென்றால், இங்கே ஒரு போக்குவரத்து சிக்னல்கூடக் கிடைக்காது. பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று எந்த விளக்குகளும் கிடையாது. அதேபோல் இத்தனை சாலைகளும் ஒன்று கூடும் இந்தச் சதுக்கத்தின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஒரு போலீஸ்காரர்கூடக் கிடையாது.

கற்பனை செய்து பாருங்கள். இப்படிப் போக்குவரத்துப் போலீஸோ, ட்ராஃபிக் சிக்னலோ இல்லாமல் ஒரு சதுக்கம் இந்தியாவில் இருந்தால் என்ன ஆகும்? ஆனால், சார்லஸ் தெ கால் சதுக்கத்தில் அது அமைக்கப்பட்ட இத்தனை ஆண்டுகளில் ஒரு விபத்துக்கூட நடந்ததில்லை.

இதேபோல், நெதர்லாந்திலுள்ள Drachten என்ற நகரம். இது 17ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டது. இதன் விஷேசம் என்னவென்றால், இந்த நகரம் முழுவதிலுமே ஒரு போக்குவரத்து சிக்னல்கூடக் கிடையாது. மற்ற ஐரோப்பிய நகரங்களை விட இங்கே விபத்துகள் கு றைவு. இந்த நகரில் போக்குவரத்து சிக்னல்களை நீக்கிவிடலாம் என்று ஆலோசனை வழங்கியவர் Hans Modernman என்பவர்.

இது என்ன சாலைப் போக்குவரத்து பற்றிக் கட்டுரையா ? இல்லை. ஒரு மனித சமூகத்தின் கலாச்சார / நாகரிக வளர்ச்சியை அம்மனிதர்கள் தமது தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து அறிந்து கொண்டு விடலாம்.

நம்முடைய இந்தியக் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், ஒருவர் இங்கேயுள்ள நகரம் ஒன்றின் ட்ராஃபிக் சிக்னலில் கொஞ்ச நேரம் நின்று கவனித்தால் போதும்.

கனரக வாகனத்தை ஓட்டி வருபவருக்கு காரில் செல்பவர் கரப்பான் பூச்சியாகவும், காரில் செல்பவருக்கு மோட்டார் சைக்கிளில் செல்பவர் கரப்பான் பூச்சியாகவும், மோட்டார் சைக்கிளில் செல்பவருக்கு சைக்கிளில் செல்பவர் கரப்பான் பூச்சியாகவும் தெரிந்து அக்கரப்பான் பூச்சிகள் நசுக்கித் தள்ளப்படுகின்றன. இந்த நிலையில் இவர்கள் எல்லோரையுமே கரப்பான் பூச்சிகளாகவும், மூட்டைப் பூச்சிகளாகவும் எண்ணி நசுக்கித் தள்ள படையெடுத்து வருகிறது அரசியல்வாதியின் கார் அணிவகுப்பு. கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு வீரர்களின் கார்கள், ஆம்புலன்ஸ், தீயணைக்கும் படை வீரர்கள்.... இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தவிர முன்னும் பின்னுமாய் 30 வாகனங்கள் என்று செல்லுகிறார் ஒரு மாநில முதலமைச்சர். சாலையெங்கும் ஏதோ ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது போல் கொஞ்ச நேரத்திற்கு இயக்கமே ஸ்தம்பித்துப் போய் கிடக்கிறது. சில பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த மன்னராட்சியே தேவலாம் என்று நினைக்கும் அளவுக்குப் போய்விட்டது இந்திய மந்திரிகளின் ஜனநாயக ஆட்சி.

ஐரோப்பிய நாடுகளில் மந்திரிகள் பாராளுமன்றத்துக்கு சைக்கிளில் சென்று வருகிறார்கள். ஐரோப்பா வரை ஏன் போக வேண்டும் ? நமக்குப் பக்கத்தில் இருக்கும் சிங்கப்பூரில் காலை நேரத்தில் பூங்கா ஒன்றில் நானும் என் நண்பரும் வாக்கிங் சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்குப் பக்கத்தில் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு சீனாக்காரரைக் காண்பித்த என் நண்பர் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். பார்த்துக் கொண்டேன். அவர் நகர்த்தும் நண்பர் சொன்னார். “ அவர் தான் திரு. லீசியன் லூங், எங்க பிரதம மந்திரி “

சிங்கப்பூரிலும் சர். மற்ற வெளி நாடுகளிலும் சரி. நீங்கள் கண்ட இடங்களிலும் குப்பைகளைப் போடக் கூடாது. ( இந்த வீடு இந்தியாவிலும், அதன் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளுக்கும் பொருந்தாது. இந்த நாடுகளில் நீங்கள் எந்த இடத்திலும் சிகரெட் துண்டைப் போடுவதிலிருந்து மலஜலம் கழிப்பது வரை என்ன அராஜகம் வேண்டு மானாலும் செய்து கொள்ளலாம்). சிங்கப்பூரில் சற்றுக் கெடுபிடி அதிகம். கண்ட இடத்தில் குப்பை போட்டால் அபராதம் விதித்து விடுவார்கள். அபராதமும் சற்று அதிகம்.

சிங்கப்பூரின் சுகாதாரம் பற்றி ஒரு சம்பவம். அங்கே ஹெளகாங்க் என்ற பகுதியில் ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். ஒரு நாள் நான் வீட்டில் தனியாக இருக்கும் போது கதவு தட்டப்பட்டது. திறந்தால் ஒரு சர்தார்ஜி. சிங்கப்பூர் நகரசபையில் பணிபுரிபவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டிற்குள் நுழைய அனுமதி பெற்று வீடு முழுவதையும் இஞ்ச் இஞ்சாக பரிசோதனை செய்தார். பிறகு திருப்தியுடன் தலையாட்டி நன்றி கூறிவிட்டுக் கிளம்பினார்.

நான் அவரை “ ஏதாவது வெடிகுண்டு சோதனையா ? “ என்று கேட்டேன். கேட்கும் போதே ‘ வெடிகுண்டுக்கும் நகரசபைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ? ‘ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. அவர் சிரித்துக் கொண்டே ‘ அதெல்லாம் இங்கில்லை ’ என்று கூறி சற்று அவகாசம் விட்டு, ஹெளகாங்க் பகுதியில் ஒருவருக்கு ஜூரம் வந்து விட்டதாகவும், அது கொசு, ஈ போன்ற ஜந்துக்களால் பரவக் கூடியது என்பதால் ஹெளகாங்க் பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டின் உட்புறம் சுத்தமாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கவே தங்களுடைய குழு அனுப்பப்பட்டிருக்கிறது என்றும் விரிவாகக் கூறினார்.

அதாவது, நம்முடைய இந்தியர்கள் கூறுவதைப் போல் இது என் வீடு, என் வீட்டுக்குள் நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன், இது என்னுடைய சுதந்திரம் என்று சிங்கப்பூரில் சொல்ல முடியாது.

நான் இருந்த வீட்டில் அந்த நகரசபை ஊழியர் சமையலறையைத்தான் முதல் முதலில் சோதனை செய்தார். பிறகு குப்பைக் கூடைகள். குப்பைக் கூடை என்றால் அதை கச்சடாவாகவும், கக்கூஸ் என்றால் அதைப் பொது கக்கூஸைப் போலவும் ஆபாசமாக வைத்திருக்க அங்கே யாருக்கும் அனுமதி இல்லை. சமையலறைக் கழிவுகளைக் கூட வெளியே தெரியாமல் ஒரு பையில் போட்டுக் கட்டி வைத்திருக்க வேண்டும்.

என் வீட்டுச் சமையலறையையோ, கழிவறையையோ அசுத்தமாக வைத்திருந்தால் அதன் மூலம் பரவும் கிருமி என் பகுதியில் வாழும் மற்றொருவரின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கிறது. இந்தப் புள்ளியிலிருந்துதான் கலாச்சாரமும், ஜனநாயகமும் ஆரம்பிக்கின்றது. அதை இந்திய உபகண்டத்தில் வசிப்பவர்களைத் தவிர, உலக மக்கள் யாவரும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இன்னும் ஒரு படி மேல். அங்கே நம்முடைய வீட்டுக் குப்பைகளைத் தர வாரியாகப் பிரித்து நாமே நான்கைந்து பைகளில் போட்டுக் கட்டிவிட வேண்டும். உதாரணமாக போத்தல், தகரம் போன்றவற்றுக்கு ஒரு பை. முட்டை, மாமிசக் கழிவு போன்ற அசைவ சமாச்சாரங்களுக்கு ஒரு பை. சிகரெட் குப்பைகளுக்கு ஒரு பை. ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு ஒரு பை. ஒரே ஒரு சலுகை என்னவென்றால், பழைய டிவி, பழைய கம்ப்யூட்டர் போன்ற சாமான்களை அப்படி அப்படியே கொண்டு வந்து வைத்து விடலாம். ப்ளாஸ்டிக் பைகளுக்குள் போட்டுக் கட்ட வேண்டிய தேவையில்லை.

இந்திய சுகாதாரத்திலேயே ட்ரெய்னிங் எடுத்திருந்த நான் நண்பரைக் கேட்டேன். பைகளைக் குப்பைத் தொட்டியில் தானே கொண்டு போய் வைக்கப் போகிறோம் ? பைகளில் நம்முடைய விலாசமா இருக்கிறது ? எனவே, மாமிசக் கழிவையும் போத்தலையும் ஒரே கவரில் போட்டுக் கொண்டு போய் வைத்து விட்டால் எவனுக்குத் தெரியப் போகிறது ?

” அப்படி வைத்தால் அடுத்த நாளே பாரிஸின் நகரசபை அதிகாரி வந்து நம் கதவைத் தட்டுவார் “ என்றார் நண்பர்.

எப்படியென்றால், குப்பைப் பைகளைப் பார்த்தாலே அவன் எந்த நாட்டுக்காரன் என்று தெரிந்து விடும். உதாரணமாக, இலங்கைத் தமிழர் விஸ்கிதான் குடிப்பார். ( விஸ்கி குடித்துக் குடித்து ஐம்பது வயதிலேயே மேலே போய் விடுவார். அது தனிக்கதை. சந்தேகமிருந்தால், அவ்வப்போது தமிழ்ப் பத்திரிக்கைகளில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் அகால மரணம் பற்றிய செய்திக் கட்டுரைகள் புகைப்படத்தோடு வரும்போது அன்னாரின் வயது என்ன என்பதைக் கவனியுங்கள். ஆனால் ஃப்ரெஞ்சுக்காரர்கள் குடிப்பது ஒயின் ( சராசரி வயது 95க்கு மேல்). இது தவிர, குப்பைப் பையில் இருக்கும் உணவு மிச்சங்களை வைத்தும் இன்னார் வீடு என்பதைக் கண்டுபிடித்து விடுவார்கள். குப்பைப் பையில் குஸ்குஸ் உணவின் மிச்சம் இருந்தால் அது மொரோக் ( Moroccan ) வீடு. தோல்மாவின் மிச்சமிருந்தால் அது நிச்சயமாக துருக்கிக்காரன் வீடு.

இவ்வாறான சுகாதார நடவடிக்கைகளின் காரணமாக சிங்கப்பூரில் கொசுவே இல்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் சிங்கப்பூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பரவியிருக்கும் கடலை ஃபெர்ரியின் மூலம் கடந்தால் நூற்றுக்கணக்கான கொசுக்களையும், குப்பைக் கூளம், சாக்கடை, கூச்சல் என்ற சகல சம்பத்துகளையும் சந்திக்கலாம். அந்த ஊரின் பெயர் ஜொஹர் பஹ்ரு. மலேஷியா.

ஜொகர் பஹ்ரு செல்லும் போதெல்லாம் இது எனக்குப் புரியாத விந்தை. ஒரே ஒரு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு ஊரில் ஒரு கொசு கூட இல்லாமல் இருப்பதும், மற்றொரு ஊரில் கொசுத் தொகை பெருத்துக் கிடப்பதும்.

கொசு என்றதும் சீனாவின் ஞாபகம் வருகிறது. புரட்சிக்கு முந்தைய சீனாவில், மக்களின் பெரும் பிரச்சினையாக இருந்தது கொசுவும், மலேரியாவும். மக்கள் கொசு வலை கூட இல்லாமல் மலேரியாவினால் கூட்டம் கூட்டமாக செத்துக் கொண்டிருந்தனர். அப்போது மாவோவின் புரட்சி வெற்றியடைந்த பின் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய எட்கார் ஸ்நோ, மாவோவிடம் ஒரு கேள்வி கேட்கிறார். “ சேர்மன், நீங்கள் புரட்சிக்காரராக இருந்ததற்கும், இப்போது சீனாவின் அதிபராக இருப்பதற்கும் என்ன வித்தியாசம் ? “

இதற்கு மாவோ சொன்ன பதில், “ ஒரே ஒரு வித்தியாசம்தான்.... இப்போது தோழர்கள் எனக்கு ஒரு கொசு வலை கொடுத்திருக்கிறார்கள் “. இது புரட்சி முடிந்த உடனே நாம் கண்ட மாவோ. அதன் பின்னர் மாவோவும் மாறி, சீனாவும் மாறி விட்டது வேறு கதை. ஆனால், மாவோவின் சர்வாதிகாரத்தில் அவர் தனிமனித சுதந்திரத்தை அழித்ததுபோல், நூற்றாண்டுகளாக சீன மக்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருந்த கொசுக்களையும் அழித்துவிட்டார்.

இப்போது மீண்டும் சிங்கப்பூருக்கு வருவோம். சுகாதாரத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் சாலை விதிகளுக்கும் அளிக்கப்படுகிறது. சாலை விதிகளை மீறினாலும் சிங்கப்பூரில் கடுமையான அபராதம் உண்டு. அப்பேர்ப்பட்ட சிங்கப்பூரில் இந்தியர்கள் வாழும் பகுதி ஒன்று உண்டு. அதன் பெயர் லிட்டில் இந்தியா. மிக அழகிய நகரமான சிங்கப்பூரில் அந்த லிட்டில் இந்தியா என்ற இடம் மட்டும் நம்முடைய சிந்தாதிரிப்பேட்டை மாதிரி இருக்கும். வெற்றிலைப் பாக்கு போட்டு மென்று எங்கே வேண்டுமானாலும் சிவப்பு சிவப்பாகத் துப்பி வைக்கலாம். பஸ் டிக்கெட், பாப்கார்ன் கவர், சாக்லெட் தாள் என்று சகல விதமான குப்பைகளையும் அப்படி அப்படியே போடலாம். பச்சை, சிவப்பு விளக்குகளைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லை. லிட்டில் இந்தியாவுக்குள் நுழைந்தால் சிங்கப்பூரிலேயே ஒரு மன நோய் விடுதிக்குள் நுழந்து விட்டது போன்ற உணர்வு வருவதினின்றும் நீங்கள் தப்பிக்கவே முடியாது.

சிங்கப்பூர் அரசு இதை எப்படி விட்டு வைத்திருக்கிறது என்று நண்பரிடம் கேட்டேன். எத்தனை பேருக்குத்தான் அபராதம் போடுவது ? சிங்கப்பூரில் இந்தியர்களின் ஜனத்தொகை அதிகம். அவ்வளவு பேரைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு சிங்கப்பூரில் போலீஸ் கிடையாது. எனவே, லிட்டில் இந்தியா என்ற இந்தப் பகுதியில் மட்டும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் என்று சிங்கப்பூர் அரசு ‘ இந்தியர்களைத் தண்ணீர் ‘ தெளித்து விட்டுவிட்டது.

சமீபத்தில் நான் ஒரு அப்பர்மிடில்கிளாஸ் பகுதியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வந்தேன். அப்போது மேல் மாடியில் குடியிருந்த வீட்டிலிருந்து பெண்களின் மாதவிடாய்த் துணி வந்து விழுந்து கொண்டிருந்தது. சொல்லி சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. மேலும், அந்தப் பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடையும் அடைத்துக் கொண்டு தெருவெங்கும் அரை அடி உயரத்துக்கு சாக்கடை நீர் நரகலுடன் ஓடிக் கொண்டிருந்தது. எனக்குள்ள குறைந்த பட்ச செல்வாக்கைப் பயன்படுத்தி நகரசபைத் துப்புரவுத் தொழிலாளர்களை அழைத்து வந்தேன். அந்த மனிதர்கள் பாதாள சாக்கடைக்குள் முக்கி எழுந்தார்கள். ( இது போன்ரு மனிதர்களே சாக்கடைக்குள் முக்கி எழும் அவலமும் உலகத்திலேயே வேறு எங்கும் இருக்காது. மனித மலத்தைத் தலையில் சுமக்கும் அவலத்தைவிட கொடூரமானது பாதாள சாக்கடையில் மனிதர்கள் முக்கி எழுவது )

முக்கி எழுந்து தலையிலிருந்து கால் வரை சாக்கடையும் நரகலும் வழிந்தோட அந்தத் தொழிலாளர்கள் கூறியது “ வழிகளையெல்லாம் பெண்களின் தூரத் துணி அடைத்துக் கொண்டிருக்கிறது “

இந்தப் பிரச்சினையால் கடும் அல்லலுற்ற நான் சமீபத்தில் வீட்டையே விற்றுவிட்டு தெற்குச் சென்னையில் வந்து குடியேறினேன். ஒரு நாள் வீட்டுக்கு அருகிலிருக்கும் கடற்கரையை அதிகாலையில் பார்த்து ரசிக்கலாம் என்று என் மனைவி அவந்திகாவையும் அழைத்துக் கொண்டு ஆறு மணிக்கு வாக்கிங் சென்றேன்.

அந்த அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். என் வாழ்வில் ஏற்பட்ட கலாச்சார அதிர்ச்சிகளில் முதன்மையானது அதுதான். மெரினா கடற்கரை உலகின் பெரிய கடற்கரைகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது. அவ்வளவு பெரிய மணல் பரப்பு முழுவதும் லட்சக்கணக்கான பாலிதீன் கவர்களும், சோளக் கதிர் கட்டைகளும் இன்ன பிற அசிங்கங்களும் நிரம்பிக் கிடந்தன.

கற்பனையில் யூகித்துப் பாருங்கள். ஐந்தாறு கிலோமீட்டர் பரப்பில் ஒரே குப்பைக் காகிதங்களாகவே சிதறிக் கிடக்கும் காட்சியை. அது ஒரு திங்கட்கிழமை காலை. எனவே, முந்தின விடுமுறை தினத்தில் மெரினா கடற்கரைக்கு வந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும் தின்று விட்டுப் போட்ட குப்பைதான் அது. சாதாரண ஞாயிறுகளில் 3 லட்சம், பண்டிகை தினங்களில் 7 லட்சம் பேர் மெரினா கடற்கரையில் கூடுகிறார்கள்.

இந்த அதிர்ச்சி சாதாரணம். இதைத் தொடர்ந்து வந்த அதிர்ச்சிதான் இன்னும் பயங்கரமானது. இந்தக் குப்பையைப் பார்க்க மனம் சகிக்காமல் நானும் அவந்திகாவும் கடலின் அருகே சென்றோம். அங்கே கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே மலக்காடாக கிடந்தது. பின்னர், நண்பர்களிடம் இது பற்றிப் புலம்பிக் கொண்டிருந்த போது எம்ஜியார் சமாதியிலிருந்து பெசன்ட் நகர் மாதா கோவில் வரை ஒரே மலக்காடுதான் என்றார்கள். மலஜலம் கழிப்பதை மக்கள் இன்னும் முடித்திருக்கவில்லை. தொடர்ந்து அந்தக் காரியம் நடந்த வண்ணமே இருந்தது.

நானும் அவந்திகாவும் தலை தெறிக்க வீட்டுக்கு ஓடி வந்தோம். இதெல்லாம் வெளிக்குப்பை என்றால், உள்குப்பை இதைவிட இன்னும் பயங்கரம். கணினியுகம் தோன்றி திடீரென்று நிகழ்ந்த தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக அதிரடியான சமூக மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன.

இதம் முழுப் பயனை அனுபவிப்பது இளைய சமுதாயம். அதிலும் குறிப்பாக, இளம்பெண்கள். இது நாள் வரை, மிகக் குறுகலாக்கப்பட்ட சமூக வெளியில் (அடுப்பங்கரை அல்லது ஆஃபீஸ் அல்லது இரண்டும்) புழுங்கிக் கொண்டிருந்த பெண்களுக்கு இன்று மிகப் பரந்த உலகம் கண்முன்னே விரிந்து கிடக்கிறது. ‘சூரியன் மறைந்து இருள் கவியத் துவங்குவதற்குள் தங்கள் புத்திரிகள் வீட்டுக்குள் வந்து அடைந்து விட வேண்டும்; இல்லாவிட்டால் அவர்களின் கற்புக்கு ஆபத்து ’ என்று எண்ணி அதை நடைமுறைப் படுத்தி வந்த மத்திய தர வர்க்கம் இன்று தங்கள் பெண்கள் இரவு 7 மணிக்கு ஆஃபீஸ் சென்று, காலை 5 மணிக்குத் திரும்பி, பகல் முழுதும் உறங்கி மாலையில் கண் விழிப்பதை வாய் பொத்தி பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம், தங்கள் செல்வ புத்திரிகள் இராக் கண் விழித்து, அமெரிக்க வாடிக்கையாளர்களுடன் பேசி, கொண்டு வந்து கொடுக்கும் 40 ஆயிரம், 50 ஆயிரம் என்ற சம்பளப் பணம்.

இந்த அபரிமிதமான பணம் இன்றைய இளம் பெண்களுக்கு எண்ணற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பது உண்மை. இதன் மூலம் காலம் காலமாக ஆண்களை எதிர்பார்த்துக் கிடந்த பெண்களின் அடிமைத்தனம் உடைந்து விட்டது. இன்று காலம், வெளி இரண்டும் பெண்ணின் கைவசப்பட்டு விட்டது. பொருளாதார ரீதியாகவும் விடுதலை கிடைத்து விட்டது. இது இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்குக் கிடைத்த அனுகூலம் என்றால், இதன் மறுபக்கமாக மிகப் பெரியதொரு வீழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பொருளாதார விடுதலையை அனுபவிப்பது நகர்ப்புற நடுத்தர வர்க்கம் மட்டுமே. சமீபத்தில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நான் கண்ட காட்சி. மதியம் ஒரு மணி இருக்கும். ஒரு 70 வயதான முதியவர் கல் உடைத்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் நின்று 10 நிமிடம் கவனித்தேன். அவர் பாட்டுக்கு இயந்திரத்தைப் போல் உடைத்துக் கொண்டேயிருந்தார். அவரை நெருங்கி “ எவ்வளவு கூலி ? “ என்று கேட்டேன். “ 50 ரூபாய் ” என்றார்.

இது ஒரு பக்கமிருக்க தகவல் தொழில் நுட்ப புரட்சியால் ஏற்பட்ட அனுகூலங்களோடு கூடவே நடந்த வீழ்ச்சிகளில் ஒன்று, ஆண் பெண் உறவுகளின் சிதைவு என்று சொல்லலாம். எங்கோ கண் காணாத தேசத்திலிருக்கும் ஒரு ஆடவனோடு ASL ( Age, Sex, Location ) என்ற மூன்று விபரங்களை மட்டும் பெற்றுக் கொண்டு லட்சக்கணக்கான வார்த்தைகளை அந்த ஆணும் பெண்ணும் பரிமாறிக் கொள்கின்றனர். இந்த லட்சக்கணக்கான வார்த்தைகளில் எத்தனை சதவிகிதம் உண்மை, எத்தனை சதவிகிதம் பொய் என்று இருவருக்குமே தெரியாது. அநேகமாக முக்கால்வாசி பொய்யாகவே இருக்கும்.

பெல்ஜியத்திலிருந்து ஒரு பெண் சாட்டில் வந்து “ ஜி ஸ்பாட் “ என்றால் என்ன ? என்று என்னைக் கேட்டால். விளக்கம் கூற ஆரம்பித்ததில் இரண்டு மணி நேரம் கடந்து போய் ஒரு Virtual கலவியே நடந்து முடிந்து விட்டது.

வெப்கேம் என்ற ஒரு சாதனத்தின் வழியே எதிராளியின் நிர்வாண உடலைப் பார்த்துக் கொண்டே சுய போகத்தில் ஈடுபடும் இளைஞர் சமூகம், இன்று பாலியல் உறவு என்பதை சொற்களாகவும், காட்சியாகவும் பதிலீடு செய்திருக்கிறது.

பாலியல் சுகம் என்பது ஸ்பரிச சம்பந்தத்திலிருந்து விலகி வெறும் வார்ததைக் கட்டமாக உருமாறியிருக்கிறது. காதல் என்பது வெறும் சரீர இச்சையாய் மாறி பெண்ணின் பாலுறுப்பு ஆணின் விந்தை வாங்கிக் கொள்ளும் கழிவறையாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் தேசம், இனம், மொழி என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் இளைஞர் சமுதாயம் ஒரே விதமான வார்த்தைகளால் தங்கள் சரீர இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள முயன்று தோல்வி அடைந்து கொண்டிருக்கின்றன.

இங்கே வார்த்தைகள் என்பது முக்கியம். நீ, வா, போ, செல்லம், ச்சோ ச்வீட் என்கிறாற்போல் மொத்தம் 200 வார்த்தைகள் இருக்கலாம். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இந்த 200 வார்த்தைகள்தான் மாறி மாறிப் புழங்கிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, பெரூ தேசத்தில் லிமா நகரில் சாட் செய்யும் ஒரு இளைஞனின் என்பஞோல் வார்த்தகளும் சென்னையில் அமர்ந்து சாட் செய்யும் ஒரு யுவதியின் ஆங்கிலம் அல்லது தமிழ் வார்த்தைகளும், மொழி பெயர்த்துப் பார்த்தால் ஒரே வார்த்தைகளாகத்தான் இருக்கும்.

உதாரணமாக, என் உறவினர் வீட்டின் கணினி ஒன்றில் சந்தர்ப்பவசமாக அமர்ந்த போது ஒரு கணினி உரையாடலைக் காண நேர்ந்த்து. நான் ஒரு சமயம் என்னுடைய ஜப்பானியத் தோழியுடன் அடித்த அதே அரட்டை மொழிகள்; அச்சு அசலாக அதே வார்த்தைகள். ஆங்கிலத்துக்குப் பதிலாக தமிழ். அந்த இளைஞனுக்கு வயது 20 இருக்கலாம். இவ்வாறாக, இருநூறே வார்த்தைகள் கோடிக்கணக்கான தடவைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு இந்தக் காற்றில் அலைந்து கொண்டிருக்கின்றன.

கணினி போதாதென்று, கைத்தொலைபேசி வழியாகவும் இந்த வெற்று வார்த்தைகள் பரிமாறப் பட்டு வருகின்றன. காதருகே கைத்தொலைபேசியை வைத்துக் கொண்டிராத எந்த ஒரு இளம் பெண்ணையும் என்னால் காண முடியவில்லை.

ஒரு நாள் நடு இரவு ஒரு மணிக்கு மேல் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். முன்பின் தெரியாத ஒரு இளம்பெண்ணுக்கு லிஃப்ட் கொடுக்க வேண்டி வந்தது. அந்தப் பெண் காரில் வந்த அரைமணி நேரமும் விடாமல் தன் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டே வந்தாள். விடைபெறும் போது கூட பேச்சை விடவில்லை.

காலை ஐந்து மணிக்கு பார்க்கில் நடந்து கொண்டிருக்கும் போது, கூடவே நடக்கும் பெண் கைத்தொலைபேசியை அந்த ஒரு மணி நேரமும் காதிலேயே வைத்தபடி பேசிக் கொண்டே நடக்கிறாள்.

இப்படி சாலையைக் கடக்கும் போதும், பஸ்ஸிலும், ரயிலிலும், உணவருந்தும் போதும், ஏன் கவுண்டரில் அமர்ந்து ஒரு வாடிக்கையாளருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது கூட இளம் பெண்கள் கைத்தொலைபேசி மூலம் ஏற்கனவே சொன்ன அந்த 200 வார்த்தைகளாலான வாக்கியங்களையே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கின்றனர்.

காரல் மார்க்ஸ் சொன்ன எட்டு மணி நேர உழைப்பு காணாமல் போய் இந்தக் கணினி யுக இளைஞர்கள் 18 மணி நேரம் உழைக்கிறார்கள். அலுப்பையும் சோர்வையும் போக்கிக் கொள்ள ஒரு நாள் குடிக்கிறார்கள்.

ஒவ்வொரு மனித வாழ்க்கையும் உள்ளீடற்ற வெற்று வார்த்தைக் கூட்டங்களாக மாறி அலைகின்றன. தனிமையை விரட்ட ஏதேதோ செய்கிறார்கள். Colouring என்ற ஒன்று. தலைமயிரை வண்ணமடித்துக் கொள்வது. இதற்குக் குறைந்த பட்ச செலவு ரூ. 2000. Straightening என்ற ஒன்று. தலை மயிரை முள்ளம் பன்றியைப் போல் மேல் நோக்கி நீட்டச் செய்வது. இதற்குக் குறைந்த பட்ச செலவு ரூ.3000. இஸ்பஹானி சென்டரில் உள்ள பெளன்ஸ் என்ற கடை சென்னை வாழ் இளைஞர்களிடையே இன்று மிகவும் பிரபலம்.

பாதி ஜட்டி வெளியே தெரிய தொப்புளிலிருந்து கீழே ஒரு சாண் இறங்கியிருக்க வேண்டும் ஜீன்ஸ். பெண்ணாக இருந்தால் ஆணுக்குப் பின்னே பைக்கில் காலத்தூக்கிப் போட்டு அமர்ந்தால் புட்டம் முழுவதும் வெளியே தெரியவேண்டும். பேண்டீஸ் என்பது வெறும் ஒரு நூல் கயிறு தான். வட்டமாக ஒரு மெல்லிய கயிறு. இந்த வட்டத்தில் இரண்டு முனைகளிலிருந்து ஊஞ்சல் போல் தொங்கும் மற்றொரு மெல்லிய கயிறு. இந்த நூல் கயிற்றின் விலை ரூ.500.

இவ்வைகையான வாழ்க்கை முறையின் பிறப்பிடம் அமெரிக்கா. அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட இந்தக் கலாச்சார அவலம் இன்று உலகம் பூராவும் பரவி விட்டது. ஐரோப்பா மட்டுமே விதி விலக்கு. ஃபிரான்ஸின் கிராமப் புறங்களில் இன்னமும் ரயிலில் ஏறுவதற்குப் பயப்படும் பெண்களை நான் சந்தித்திருக்கிறேன்.

இன்றைய கால கட்டத்தின் ஆன்மீக வீழ்ச்சிக்கும், உலகின் ஆன்மீக வறட்சிக்கும் சாட்சியாக விளங்குவது அமெரிக்கா. இதற்கு ஒரே உதாரணம் தருகிறேன்.

ஒரு அமெரிக்க மருத்துவமனை. ஒரு விபத்தில் வலது கை துண்டாகிப் போன ஒருவன் வலியால் அலறித் துடித்த படி இடது கையால் தனது மருத்துவக் காப்பீட்டுப் படிவத்தை மிகுந்த சிரமத்துக்கிடையே பூர்த்தி செய்து கொண்டிருக்கிறான். பூர்த்தி செய்யாவிட்டால் மருத்துவ உதவி கிடைக்காது. இதைவிடக் கோரமான காட்சிகளை இந்திய நாட்டின் அரசு மருத்துவமனைகளில் ஒருவர் பார்க்க முடியும். இதைத்தான் ஆன்மீக வறட்சி என்று கூறினேன்.

அமெரிக்காவை தனது மாடலாகக் கொண்ட இந்திய இளைஞர் சமூகம் இத்தகையதொரு ஆன்மீக வறட்சியில் தான் இன்று சிக்கிக் கொண்டிருக்கிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் திபெத்திய புத்த பிக்குகள் எட்டாவது பெரும் பாவம் என்று கருதப்பட்ட திரிஸ்தித்தியாவினால் (சோகம்) பாதிக்கப்பட்டனர். திரிஸ்தித்தியாவை உண்டாக்குவது boredom. ஒரு பிக்கு ஒரு தேவதையை வசப்படுத்தி அதனிடம் தன் பிரச்சினையைக் கூறினான். அவன் திரிஸ்தித்தியாவினால் அவதிப்படும் போதெல்லாம் அந்த தேவதை அவனை வெளியே அழைத்துச் சென்றது. கண்காணாத தூர தேசங்களுக்கெல்லாம் அவனை அழைத்துச் சென்றது அந்த தேவதை. அங்கேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றும். ஆனால் மடாலயத்துக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்து விடும். ஆனால் ஆச்சரியகரமாக இந்தப் பயணங்களெல்லாம் அவனுடைய திரிஸ்தித்தியாவைக் குறைப்பதற்க்கு பதிலாக அதிகப்படுத்தவே செய்தது. இப்போது அவனுடைய boredom இன்னும் தீவிரமாகி அது ஒரு ontological தன்மையை அடைந்தது. துக்கத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டான் அந்த பிக்கு. இப்போது அந்த தேவதையுடன் வெளியே செல்லும் ஒவ்வொரு பயணமும் அவனது துக்கத்தை அதிகரிப்பதாகவே இருந்தது. இந்த நிலையில் அவனுக்கு அந்த மடாலயமும், சக பிக்குகளும், பிரார்த்தனையின் போது கிடைக்கும் தெய்வத்தின் தரிசனமும் எல்லாமே ஒரு மாயத் தோற்றமாகத் தெரிய ஆரம்பித்தது. அவனது உலகம் கேளிக்கை என்ற விஷத்தின் மூலமாக வெற்றிடமாக்கப்பட்டது. இதன் பிறகு 1200 ஆண்டுகள் கழித்து ஃபிரான்ஸில் பாஸ்கல் என்ற ஒருவர் . Pensees என்ற நூலை எழுதினார். அதில் கேளிக்கை என்ற ஒரு அத்தியாத்தில் அவர் பின்வருமாறு எழுதினார்.

மனிதனின் எல்லாத் தீமைகளும் அவனுடைய ஒரே ஒரு தன்மையிலிருந்து தான் உருவாகின்றன. அந்த ஒரே ஒரு தன்மை என்னவென்றால், அவனால் ஒரு தனி அறையில் தனித்து இருக்க முடியாது என்ற இயலாமைதான்.

சென்ற ஆண்டு ( 2006 ) கிறிஸ்துமஸ் சமயத்தில் ஃபிரான்ஸிலுள்ள லூர்து மாதாவை தரிசிக்க் ஒரு யாத்திரை மேற்கொண்டேன். தெற்கு ஃபிரான்ஸின் கோடியில் ஸ்பெய்ஸ் எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் ஒரு சிற்றூர் லூர்த். நான் லூர்துக்கு 170 கி.மீ. தூரத்திலுள்ள துலூஸ் என்ற நகரில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நண்பருடன் லூர்த் சென்றேன். கிறிஸ்துமஸ் தினம். அப்போது எனக்கு பாவ்லோ கோயலோவின் ஞாபகம் வந்தது. அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். அவர் அங்கேதான் லூர்துக்குப் பக்கத்தில் ஸந்த் மர்த்தீன் என்ற கிராமத்தில் தங்கியிருப்பதாக அறிந்திருக்கிறேன். ஸந்த் மர்த்தீன் லூர்திலிருந்து 15 கி.மீ. தூரம்தான் என்பதால் அவரைச் சந்திக்கலாம் என்று கிளம்பினோம். முன் கூட்டியே அவரிடம் சந்திப்பு குறித்து அனுமதி பெற்றிருக்கவில்லையெனினும் ஒரு நப்பாசையால் சென்றோம். பல மைல் விஸ்தீரணத்துக்குப் பரந்திருக்கும் புல்வெளியின் நடுவே ஒரு சிறிய வீடு. வீடு பூட்டியிருந்தது. கிறிஸ்துமஸூக்கு அவரும் எங்காவது கிளம்பியிருக்கலாம். ஸந்த் மர்த்தீன் ஒரு கிராமம் தான் என்றாலும் கூட பக்கத்து வீடே ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. ஸந்த் மர்த்தீனில் ஒரு பேக்கரி கூட கிடையாது. ப்ரெட் வாங்க வேண்டும் என்றாலும்கூட பாவுலோ கோயலோ 15 கி.மீ. தாண்டி லூர்துக்குத்தான் செல்ல வேண்டும். மனிதர் ஒரு டி.வி. பெட்டியுடனும் (500 சேனல்களாம்) கணினியுடனும் தன்னந்தனியாக அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ஒரே பொழுதுபோக்கு வில்வித்தை பழகுவது.

சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பனி போர்த்த மலைகள். கிறிஸ்துமஸ் மரங்கள் வெண் பனியைப் போர்த்திக் கொண்டிருந்தன. சாலையோரத்தில் பயணிகள் ஓய்வெடுக்க பெஞ்சுகளும் நிழற்குடைகளும் இருந்தன. அங்கே அது நிழற்குடை அல்ல. பனிக்குடை என்று சொல்ல வேண்டும். பஞ்சுப் பொதிகளாய் ஸ்நோ விழுந்து கொண்டிருந்தது. ஐரோப்பாவில் ஸ்நோ விழாமல் கிறிஸ்துமஸே இல்லை.

மதியம் மணி மூன்று இருக்கும். நண்பர் “ மது அருந்தலாமா ? “ என்று கேட்டார். நீங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு மெதுவாக நடந்து பாவுலோ கோயலோவின் வீட்டுப் புல்வெளிக்கு வந்து அமர்ந்தேன். பனியால் நண்பரின் உருவம் நிழலைப் போல் தெரிந்தது.

கண்களை மூடினேன். வாழ்வில் முதல் முறையாக விழித்திருக்கும் போதே கண்களை மூடியது அப்போது தான். வித்தியாசமாக இருந்தது. பனி சூழ்ந்த ஒரு சாலையில் தனியே சென்று கொண்டிருக்கும் ஒரு பனி உருவம். பிறகு, பனி அந்தச் சாலையை முழுமையாகப் பார்வையிலிருந்து மறைத்தது. எங்கும் ஒரே வெண்மை. அப்போது என் மனம் என்னிடம் ஏதோ பேசியது. உன்னிப்பாக கவனித்தேன். உன் கண்களை உற்று நோக்கு என்றது மனம். மனதின் குரல் ஒரு உபதேசியின் குரலைப் போலிருந்தாலும் பேச்சு என்னவோ கிசுகிசுப்பான் தொனியிலிருந்தது. அந்தக் குரலின் சொல் வழி தொடர்ந்தேன். கருணை என்ற வார்த்தை சுவாசத்தில் ஓடியது. அதன் பின்பு மனம் என்னைச் செவிகளின் அருகே அழைத்துச் சென்று ஞானம் என்றது. சிறிது நேரம் அமைதிக்குப் பின்னர், என்னை வாயின் பக்கம் கொண்டு வந்து பொறுமை என்றது. புரிந்து கொண்டு மெளனமானேன். அதன் பிறகு எந்த சப்தமும், எந்த அசைவும் இல்லாத பூரண மெளனம். எவ்வளவு நேரம் கடந்ததென்று தெரியவில்லை. திடீரென்று பிரக்ஞை திரும்பிய போது மனம் என் இதயத்தை ஸ்பரிசித்து அன்பு, அன்பு என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது.

கண் விழித்தபோது நண்பர் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். “ நீங்கள் போய் ஒன்றரை மணி நேரமாகிறது. பயந்தே போனேன். இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? “ என்று கேட்டார் நண்பர்.

” சும்மா இருந்தேன் “ என்றேன் அவரிடம். துலூஸூக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது ” நீங்கள் மதுபானத்தில் விருப்பமுள்ளவராயிற்றே ? ஏன் சாப்பிடவில்ல ? “ என்று கேட்டார் நண்பர்.

அவருக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தேன்.

ஒரு ஊரில் ஒரு ஆள் தாசி வீடே கதி என்று கிடந்தான். எல்லா தாசி வீட்டுக்கும் போகாமல் தேவதேவி என்ற ஒரே தாசியிடம் அடிமையாய்க் கிடந்தான். அவள் நடந்து சென்றால் அவளுக்கு நிழல் வேண்டுமென, குடையை அவள் முகத்துக்கு நேரே நின்றபடி பிடித்துக் கொண்டு பின்னோக்கி நடப்பான் அந்த தாசன். ஊராரின் பரிகசிப்பைப் பற்றி அவன் சிறிதும் கவலைப்படவில்லை.

ஒரு நாள் அந்த ஊருக்குத் தன் சீடர்களுடன் வந்து சேர்ந்தார் ஸ்ரீராமானுஜர். சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இப்படி வினோதமான முறையில் ஒரு பெண்ணுக்குக் குடை பிடித்துக்கொண்டு போகும் அவனைப் பார்த்து ஆச்சரியமுற்று சீடர்களிடம் அவன் யாரென வினவினார். அவர்கள் விபரம் சொல்லவே, அவனை நான் பார்க்க வேண்டுமே என்று கேட்டார் உடையவர்.

அழைத்து வரப்பட்டான் அந்த் தாசன். “ ஏன் இப்படிச் செய்கிறீர் ? “ என்று கேட்ட ராமானுஜரிடம் அவன், “ நீங்களாக இருந்தாலும் அப்படித்தான் குடை பிடிப்பீர்கள். அந்தப் பெண்ணின் கண்களின் அழகு அப்படி. அவ்வளவு அழகிய கண்களை நீங்கள் இந்த உலகிலேயே காண முடியாது “ என்கிறான் தாசன்.

உடனே ராமானுஜர் “ அந்த ஸ்த்ரீயின் கண்களைவிட அழகிய கண்களை நான் உமக்குக் காண்பித்தால் என்ன செய்வீர் ? “ என்று கேட்டார். அதற்கு தாசன் இவளை மறந்து விட்டு அந்தக் கண்களை உடையவருக்கு அடிமையாகி விடுவேன் என்கிறான்.

ஸ்ரீராமானுஜர் அந்த தாசனுக்குக் காண்பித்த கண்கள் சாட்சாத் ஸ்ரீமந்நாராயணனுடையது. அவ்வளவுதான். அந்த தாசர் பின்னாளில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகி தொண்டரடிப் பொடி ஆழ்வார் என அழைக்கப்பட்டார். கதையைச் சொல்லி முடித்து விட்டு, “ கண்களை மூடி மனதின் குரலைக் கேட்கத் துவங்கினால் தனிமை என்ற நோயின் பிடியிலிருந்து மீள முடியும் “ என்றேன்.

0 comments:

Post a Comment