கேள்வி பதில்

on Saturday, April 4, 2009

கேள்வி பதில் என்று ஒரு பகுதியை ஆரம்பிக்கலாம் என்று தோன்றிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் பாபுராவ் பட்டேலின் ( 1904-82) கேள்வி பதில் பகுதியை மிக விருப்பமாகப் படிப்பேன். அவர் அந்தக் காலத்தில் இருந்த ஜன சங்கத்தைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது அரசியல் கருத்துக்களைத் தவிர மற்ற எல்லா விதத்திலும் அவர் என்னை வெகுவாக் கவர்ந்தவராக இருந்தார். மிகத் தேர்ந்த ஜோதிடர். ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை மணந்து கொண்டார் ; அதற்குப் பிறகு ஒரு நடிகையை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். (ம்ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்!) திரைப்பட விமர்சகர் ; இயக்குனர் ; பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் ; புகழ் பெற்ற பத்திரிகையாளர் , ஹோமியோபதி மருத்துவர் என்று பல பெருமைளைக் கொண்டவர் பாபுராவ் பட்டேல். 1935- இல் ஃபிலிம் இந்தியா என்ற சினிமா பத்திரிகையைத் துவக்கினார். பின்னர் இது மதர் இந்தியா என்ற அரசியல்

பத்திரிகையாக மாறியது. நான் என்னுடைய கல்லூரிப் பருவத்தில் மதர் இந்தியாவைத் தவறாமல் படித்து வந்திருக்கிறேன். அதில் அவருடைய கேள்வி பதில் பகுதி பக்கம் பக்கமாக வெளி வரும். அவரிடம் கேட்கப் பட்ட சில கேள்வி பதில்கள்:

கே: உங்கள் சிந்தனைகளைச் சேகரித்துக் கொள்வதற்காகத்தான் அதிகம் பேருடன் பழகுகிறீர்களா ?

ப: நான் குப்பை பொறுக்குபன் அல்ல. நான் ஒரு சிந்தனையாளன். என் சிந்தனை தன் சிறகுகளை விரித்து இந்த உலகமெங்கும் பறந்து செல்கிறது. அச்சிந்தனையோடு இணையான அலைவரிசையைக் கொண்டவர்கள் அதைப் பெற்றுக் கொள்கிறார்கள் ; சிலர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள். அந்த அலைவரிசையில் இல்லாதவர்கள் அதை இழந்து விடுகிறார்கள்.

கே: சினிமாவில் நுழைவதற்கு ஒரு சுலபமான வழி சொல்லுங்களேன் ?

ப: உங்கள் ஊரில் உள்ள மிக அழகான பெண்ணைப் பிடித்து அழைத்துக் கொண்டு சினிமா கம்பெனி பக்கம் செல்லுங்கள். இது தவிர , இன்னொரு வழியும் இருக்கிறது. அது கொஞ்சம் கடினமான வழி.

கே: நம் நடிகைகளில் எத்தனை பேர் கன்னிப் பெண்கள் ?

ப: கன்னித் தன்மை கொண்ட நடிகைகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. மேலும் , இந்த நவீன யுகத்தில் கன்னித் தன்மை என்பது ஒரு புராதன கால வஸ்துவாகி விட்டது. வேண்டுமானால் கிராமங்களில் போய் தேடிப் பாருங்கள் ; ஒருவேளை கிடைக்கலாம்.

பாபுராவ் பட்டேலின் சினிமா விமர்சனங்களும் , அரசியல் விமர்சனங்களும் மிகக் கூர்மையானவை. புகழ் பெற்ற இயக்குனர் V. சாந்தாராமின் நவ்ரங்க் ( 1959) படத்தைப் பற்றி பாபு ராவ் எழுதினார்: "இது ஒரு வயதான ஆளின் மென்ட்டல் மாஸ்டர்பேஷன்."

***

தமிழில் கேள்வி பதில் என்று எடுத்துக் கொண்டால் எனக்குப் பிடித்த பகுதி குமுதத்தின் அரசு பதில்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அரசு பதில்களை விரும்பிப் படித்து வருகிறேன். எஸ்.ஏ.பி.யை மிகவும் கூர்ந்து கவனித்து வந்தவன் நான். என் நண்பன் நிக்கியிடம் அடிக்கடி சொல்லுவேன் , என்னிடம் ஒரு வாரப் பத்திரிகையின் பொறுப்பு கொடுக்கப் பட்டால் அதை ஒரு வருட காலத்தில் என்னால் 5 லட்சம் பிரதிகள் அளவுக்குக் கொண்டு வர முடியும் என்று. அந்த அளவுக்கு எஸ்.ஏ.பி.யின் நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தேன். ஆனால் இப்போது ஒரு அலுவலகத்துக்கு தினசரி காலை 10 மணிக்குச் செல்லும் மனநிலையை இழந்து விட்டேன். எஸ்.ஏ.பி.யின் மறைவுக்குப் பிறகும் கூட அரசு பதில்களின் சுவாரசியம் குன்றாமல் இருந்து வருவது பாராட்டுகுரியதுதான்.

எனக்கு 14 வயது இருக்கும் போது அரசுவுக்கு ஒரு கேள்வியை அனுப்பி வைத்தேன். நான் எதிர்பாராத விதமாக அந்தக் கேள்வி பிரசுரமும் ஆகி விட்டது. அவ்வளவுதான். எங்கள் ஊரே என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டது. ஏனென்றால் , அந்த ஏடாகூடமான கேள்வியை என் சொந்தப் பெயரில் அனுப்பி வைத்திருந்தேன். என் சினேகிதர்களின் வீட்டில் எல்லாம் என்னை உள்ளே விடவே மறுத்தார்கள். அந்தச் சமயத்தில் என் அம்மா தான் என் பாதுகாப்புக்கு வந்தார்கள். "அவன் என்ன கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டான். அவர் ஒரு ஆண் பிள்ளைதானே ?" சமூகத்தில் ஆண் பிள்ளையாக இருப்பதன் அனுகூலத்தை அன்று நான் உணர்ந்தேன். நான் அரசுவிடம் கேட்ட அந்தக் கேள்வி இது தான்: "எனக்கு எப்போது பார்த்தாலும் செக்ஸ் உணர்வு அதிகமாகவே இருந்து கொண்டிருக்கிறது ; அது பள்ளிக்கூடமாக இருந்தாலும் சரி , கோவில் கர்ப்பக்கிரகமாக இருந்தாலும் சரி. இதற்கு என்ன செய்யலாம் ?" எஸ்.ஏ.பி. என்ன பதில் சொன்னார் என்று ஞாபகம் இல்லை.

***

கேள்வி பதில் விஷயத்தில் சில எதிர்பார்க்காத இடங்களிலிருந்தெல்லாம் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. திரைப்படங்களில் நல்ல பாடல்கள் மட்டுமே எழுதக் கூடியவர் (ஆய்த எழுத்து) என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வைரமுத்து குமுதம் கேள்வி பதிலில் ரொம்பவே அசத்தி விட்டார். அயிரை மீன் குழம்பு வைக்கும் விதம் பற்றி அவர் எழுதியிருந்ததைப் படித்து அப்படியே எனக்கு நாவில் ஜலம் வந்து விட்டது. ஆனால் நான் பெரிதும் எதிர்பார்த்த பால குமாரன் பதில்கள் Horrible!

சுஜாதாவை விட்டு விடலாம். ஏனென்றால் அவர் எது எழுதினாலும் சுவாரசியமாகத்தான் இருக்கும்.

சரி , இப்போது அடியேனின் கேள்வி பதில் பகுதி:

அன்பு சாருவுக்கு

உங்கள் கட்டுரைகளை தினமும் இணையத்தில் வாசித்து வருகிறேன். பாலியல் குறித்த உங்கள் பார்வை மிகக் கூர்மையாக உள்ளது. இந்தியர்களின் வாழவின் சகல அம்சங்களிலும் அடக்கி வைக்கப் பட்ட காமமே தெரிகிறது என்பதைத் தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள். நான் ஓஷோவை விரும்பி வாசிக்கக் கூடியவன். உங்கள் கருத்தும் ஓஷோவின் கருத்தும் பாலியல் விஷயத்தில் மிகச் சரியாகப் பொருந்துவதை கவனித்து வியந்திருக்கிறேன். சூ · பி தத்துவத்தையும் , வைணவத்தையும் ஆழ்ந்து படிப்பவர் நீங்கள். உங்கள் வாழ்வில் ஓஷோவின் தத்துவம் ஏதாவது பாதிப்பைச் செய்திருக்கிறதா ?

அன்புடன் ,

அருண்.

15 ஆண்டுகளுக்கு முன்பு என் திருச்சி நண்பர்கள் ஸ்ரீராம் மற்றும் மாணிக்கம்தான் எனக்கு ஓஷோவை எனக்கு அறிமுகம் செய்தனர் , ஒரு கேஸட்டின் வழியாக. முதலில் அவர் குரலைக் கேட்டு அசந்து போனேன். அப்படியே கேட்போரை வசியம் செய்யக் கூடிய குரல். அடுத்து அவரது ஆங்கில உச்சரிப்பு. ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் எந்த ஆங்கில உச்சரிப்பைக் கிண்டல் செய்வார்களோ அதே உச்சரிப்பு. ஆனால் அவர் சொல்லும் விஷயம்...அப்படியே என் மனதில் நான் என்ன நினைக்கிறேனோ அதை அவர் பேசிக் கொண்டிருந்தார். அன்றே நான் ஓஷோவைப் படிப்பதையோ , கேட்பதையோ விட்டு விட்டேன். ஏனென்றால் அவரைப் படித்தால் எனக்கு நானே plagiarist என்று தோன்றும். ஆனால் இப்போது , குறைந்த பட்சம் , எனக்கு மட்டுமாவது நான் ப்ளேஜியரிஸ்ட் அல்ல என்று தெரியும் அல்லவா ? இதே போல் ஸில்வியா ப்ளாத்தையும் நான் படிப்பதில்லை. ஏனென்றால் , என் மனதில் என்ன ஓடுகிறதோ அதே வார்த்தைகளைத்தான் அவரும் எழுதி வைத்திருக்கிறார்.

ஓஷோ ஒரு செக்ஸ் சாமியார் என அறியப் பட்டது ஒரு சோகம். என்னிடம் ஒரு கட்டுரை கேட்ட ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் தயங்கிய குரலில் "கட்டுரையில் செக்ஸ ¤ ம் குடியும் வேண்டாம்" என்று கூறினார். வருத்தமாக இருந்தது. என்னைப் பற்றி அவர் மனதுள் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தையே அவர் என்னிடம் தெரிவிக்கிறார். உண்மையில் அந்த பிம்பத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஓஷோ ஒரு தத்துவவாதி. நான் ஒரு எழுத்தாளன். அவ்வளவுதான் வித்தியாசம்.

30.3.2008.

Source : www.charuonline.com


கமலும் நானும்

கடந்த முப்பது வருடங்களாக கமல்ஹாசனை கூர்ந்து கவனித்து வருகிறேன். அவருக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருந்து வருவது போலவே தோன்றிக் கொண்டிருக்கும். எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் என்று ஒரு நண்பர் உண்டு. அவர் ஒரு நாள் சொன்னார். "நேற்று டீவில கமல் பேட்டி போட்டான். என்ன சாரு , அந்த கமல் உங்களை மாதிரியே பேசுறான். உடனே டக்னு சேனலை மாத்திட்டேன்." அவர் நேற்று என்று குறிப்பிட்ட தினம் தீபாவளி நாள். அந்த நன்னாளில் கமல் சில விஷயங்களை (உண்மைகளை)

பச்சையாகச் சொல்லிவிட்டாராம். இது போல் பல சந்தர்ப்பங்களில் பல நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். (அதுசரி , சினிமா நடிகர்களை ஏன் மக்கள் அவன் , இவன் என்று ஒருமையில் பேசுகிறார்கள் ?)

கமலோடு எனக்கு கடிதப் பரிமாற்றம் உண்டு. தொலைபேசியிலும் பேசியிருக்கிறேன். கார்த்திக் அப்போது சிறு பையன். கைத்தொலைபேசி வந்திராத நேரம். நான் வீட்டுக்குள் நுழைந்ததும் "டாடி , கமல்னு ஒருத்தர் போன் பண்ணினார்" என்றான். எனக்குப் புரிந்து விட்டது. "டேய் , அவர் ஒருத்தர் இல்லடா. கமல்ஹாசன். ஆக்டர்" என்றேன். அவன் அதற்கு , பாமரன் என் எழுத்துக்களை எவ்வாறு எதிர் கொள்கிறாரோ அதே தினுசில் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.

மகாநதியை வெகுவாக சிலாகித்து 1993- இல் கணையாழியில் ஒரு நீண்ட விமர்சனம் எழுதியிருந்தேன். அதை கமல் படித்திருப்பாரோ இல்லையோ என்று ஒரு அவா உசாவியது என்னுள். பிறகு அந்த அவாவை ஒரு ஓரம் கடாசி விட்டேன். ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய அந்த அவாவுக்கு பதில் கிடைத்தது. என் நண்பர் தியோடர் பாஸ்கரன் தமிழில் வெளி வந்த சினிமா பற்றிய முக்கியமான கட்டுரைகளை ஒரு புத்தகமாகத் தொகுத்து வெளியிட்டார். அதில் மகாநதி பற்றிய என் கட்டுரையும் இருந்தது. ஒருநாள் தியோடர் பாஸ்கரன் போன் செய்து "உங்கள் கட்டுரை நன்றாக இருந்ததாக கமல் சொன்னார்" என்றார். அடிக்கடி கமல் வருத்தப் படுவதுண்டு , எழுத்தாளர்களுக்கும் திரையுலகக் கலைஞர்களுக்குமான தூரம் அதிகமாக இருக்கிறது என்று. ' அடக் கடவுளே , அந்த தூரம் 15 ஆண்டுகளா! ' என்று நினைத்துக் கொண்டேன். குருதிப் புனலைப் பற்றி நான் எழுதியிருந்த கடுமையான விமர்சனத்தை அவரிடம் காட்டியவர்கள் இதைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டார்கள். பொதுவாக அதுதான் நம்மவர்கள் வழக்கம். (தியோடர் பாஸ்கரன் மட்டும் அந்த சினிமா புத்தகத்தைத் தொகுத்திருக்காவிட்டால் இன்னமும் கமல் என்னுடைய மகா நதி விமர்சனத்தைப் படித்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது).

சினிமா நடிகர் என்றால் அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி அலசுவது 6 கோடித் தமிழ் மக்களின் வழக்கம். அதன்படி , நாம் விரும்புகிறோமோ இல்லையோ எல்லா நடிகர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நம் காதுகளில் வந்து விழும் செய்திகள். அப்படி , கமலைப் பற்றி விழுந்த விஷயங்கள் பலவும் என் வாழ்க்கைச் சம்பவங்கள் பலவற்றை ஒத்திருந்தன.

ஆனால் கமலை நான் நேரில் சந்த்திததில்லை. அப்படிச் சந்திக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் சமீபத்தில் மிக துரதிர்ஷடமான ஒரு இடத்தில் நிகழ்ந்தது. 27-2-2008 அன்று ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் சுஜாதா வீட்டில் நின்று கொண்டிருந்தேன். சுஜாதாவின் உயிரற்ற உடல் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்தது. சுஜாதா இப்படி கண்ணாடிப் பேழையில் வைக்கப் பட்டிருக்கும் போதா இவர் வீட்டுக்கு வர நேர வேண்டும் என்ற வருத்தம் மேலிட்டது. ஏனென்றால் கடந்த ஒரு வருட காலமாக இந்த வீட்டைக் கடந்துதான் தினசரி காலை ஐந்தரை மணி அளவில் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குச் சென்று கொண்டிருந்தேன். தற்சமயம் யோகாவில் இறங்கி விட்டதால் வாக்கிங் செல்வதில்லை. தினமும் ஐந்து மணிக்குக் கிளம்பி

ராமகிருஷ்ணா மடம் சாலை வழியே சென்று மடத்தின் வெளியிலேயே நின்று (காலில் ஷூ ) பரமஹம்சருக்கு ஒரு ஸல்யூட் அடித்து விட்டு , நேரே சென்று இடப்பக்கச் சாலையில் திரும்பி நடந்து பாபா கோவிலின் வெளியே நின்றபடி ஓரிரு நிமிடம் தியானித்து விட்டு , நேரே போய் வலது பக்கம் திரும்பி அங்குள்ள குடிசைப் பகுதியைக் கடந்து இடப்பக்கம் திரும்பினால் சுஜாதா வசிக்கும் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை. ( 15 ஆண்டுகளுக்கு முன்னால் நான் மந்தைவெளி கல்லறைத் தெருவில் - செய்ன்ட் மேரீஸ் தெரு - இருந்தபோது இந்தப் பக்கம் அடிக்கடி வருவதுண்டு. அப்போது இந்தக் குடிசைப் பகுதியின் பெயர் காட்டு நாய்க்கன் குடியிருப்பு என்பதாக இருந்தது) அந்த சுந்தரம் சாலையைக் கடந்தால் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் வரும். (என் வீட்டுக்குப் பக்கத்திலும் ஒரு லேடீஸ் ஹாஸ்டல் உண்டு!) அதைத் தொடர்ந்து வருவது நாகேஸ்வர ராவ் பூங்கா என்ற குட்டி சொர்க்கம்.

ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையைக் கடக்கும் போதெல்லாம் சுஜாதாவைப் பற்றிய ஏதாவது ஒரு நினைவு ஓடும். நமக்கு மிகப் பிடித்த ஒரு தமிழ் எழுத்தாளனோடு நாம் ஏன் நேரில் பழகாமால் இருக்கிறோம் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். ஆனால் சுஜாதாவே இதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார். ஒரு நல்ல வாசகன் அவனுக்குப் பிடித்த எழுத்தாளனைச் சந்திக்க மாட்டான்.

கண்ணாடிப் பேழைக்குச் சற்றுத் தள்ளி நானும் கனிமொழியும் நின்று பேசி கொண்டிருக்கிறோம். ம்ஹூம். பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது தவறு. இம்மாதிரி இடங்களில் என்ன பேசுவது ? வெறுமனே நின்று துக்கத்தைத் தின்று கொண்டிருந்தோம். அப்போது மதன் வந்தார். கை கொடுத்து என் பெயர் சொன்னேன். "நன்றாகத் தெரியும் ; சற்று முன்பே உங்களைச் சந்ததித்து விட்டேன் , கண்களால் ; இப்போதுதான் கை கொடுக்கிறேன்" என்று அவர் சொன்னதை ரசித்தேன். திரும்பினால் கமல். என் எதிரே நின்று கனிமொழியிடம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. முகமன் கூறிப் பேசுவதும் செயற்கையாக இருக்கும். பேசாமல் இருப்பதும் செயற்கையாக இருக்கும். இரண்டாவது செயற்கையையே தெரிவு செய்தேன். கண்களும் சந்த்தித்துக் கொள்ளவில்லை.

இதற்கடுத்த இரண்டாவது நாள் சுஜாதா இரங்கல் கூட்டம் நாரத கான சபாவில் நடந்தது. நிறைய பேர் பேசினர். நானும் பேசினேன். எனக்குப் பின்னர் பேசிய கமல் "சாரு நிவேதிதா பேசியதையே என் கருத்தாகவும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று ஆரம்பித்து மேலும் சில விஷயங்களைச் சொன்னார். எனக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ராகவன் ஞாபகம் வந்தது.

***

இரண்டு மாதங்களுக்கு முன்னால் நிக்கியும் , அவர் தோழி ஒருவரும் , பாலு அய்யேயெஸ்ஸும் பார்க் ஷெரட்டன் வெஸ்ட்மின்ஸ்டரில் அமர்ந்திருந்தனர். பின்னர் அங்குள்ள தக்ஷண் ரெஸ்தொராந்த் சென்றனர். நிக்கியும் தோழியும் பேசிக் கொண்டிருக்கும் போது பாலு என்ன செய்வான் , பாவம். நானும் இல்லை. சுற்றும் முற்றும் பராக்குப் பார்க்க ஆரம்பித்திருக்கிறான். நாங்கள் எப்போதும் அமர்வது வலப்பக்க மூலை என்பதால் வலப் பக்கம் திரும்பினால் வெறும் சுவர்தான் தெரியும் என்பதால் இடப்பக்கம் திரும்பியிருக்கிறான். இடப்பக்கம் இரண்டு இளம் பெண்கள். இளம் பெண்கள் என்றால் 17, 18 வயது டீன் ஏஜ் பெண்கள். இவன் வெறித்து வெறித்துப் பார்க்க , ஒரு பெண் இவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தி , சைகையிலேயே ' என்ன ?' என்று கேட்டிருக்கிறாள். உடனே எக்கச்சக்கமாக மிரண்டு போன பாலு , இந்தப் பக்கம் திரும்பி விட்டான். ஆனால் எவ்வளவு நேரம் சுவரையே பார்த்துக் கொண்டிருப்பது ? திரும்பவும் இடப்பக்கம். திரும்பவும் அந்தப் பெண் - அதே பெண் - பாலுவைப் பார்த்து புருவத்தை உயர்த்த , திடீர் துணிச்சல் பெற்ற பாலுவும் புருவத்தை உயர்த்தியிருக்கிறான். அதற்கு அந்தப் பெண் திரும்பவும் புருவத்தை உயர்த்த - எவ்வளவு நேரம்தான் புருவத்தைப் புருவத்தை உயர்த்திக் கொண்டிருப்பது , புருவம் வலிக்காதா ? - பாலு நேரடியாக அந்தப் பெண்ணீடம் "இங்கே பாருங்கள் ஸிஸ்டர்...இந்த ரெண்டு பேர் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு போர் அடிக்கிறது. நீங்கள்தான் கொஞ்சம் என் மீது இரக்கப் பட்டு இங்கே வந்து உட்காருங்களேன்" என்று கூப்பிட அந்த இரண்டு பெண்களும் மகா பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்து விட்டு இந்த இடத்துக்கு வந்து விட்டனர் (ஸிஸ்டர்தான் அந்த நகைச்சுவை). அப்போதுதான் அவர்கள் சாப்பிட்டும் முடித்திருந்தார்கள். (அவர்கள் சாப்பிட்டதற்கு அவர்கள்தான் பைசா கொடுத்தார்கள் என்றார் நிக்கி).

உடனே எல்லோரும் பல காலம் பழகியதைப் போல் பழக ஆரம்பித்து விட்டார்கள். இரண்டு பேரில் ஒருத்தியின் பெயர் அங்கிதா. கிழக்காசிய நாடு ஒன்றைச் சேர்ந்த தமிழ்ப் பெண். சற்று பூசினாற் போன்ற தேகம். வெரி செக்ஸி. இரண்டாமவள் குஜராத்தி சேட் வீட்டுப் பெண். அல்கா. இரண்டு பேரும் இங்கே ஒரு கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறார்கள். இருவருமே சொன்னது , நிக்கியையும் பாலுவையும் போன்ற அருமையான , இனிமையான நபர்களைத் தங்கள் வாழ்விலேயே பார்த்ததில்லை.

மறுநாள் பாலு ஈ.சி.ஆர். ரோட்டில் ஏதோ வேலையாக காரில் சென்று கொண்டிருக்கிறான். காலை பத்து மணி. அங்கிதாவிடமிருந்து போன். எங்கே இருக்கிறீர்கள் என்றதும் சொல்லியிருக்கிறான். "அடடா , எங்களிடமும் சொல்லியிருக்கலாம் அல்லவா ? இங்கே நாங்கள் சும்மாதானே போர் அடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் ?" இவன் பதிலுக்கு மதியம் கூப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டான். மதியம் போன். அங்கிதா. "ஓ , சங்கிதா (பாலுவுக்கு அங்கிதா என்றெல்லாம் சொல்ல வராது) , இப்போ நான்

கொஞ்சம் சரக்கு சாப்பிட்டுவிட்டேன். ஈவ்னிங் கூப்பிடுகிறேன்." மாலையும் அங்கிதாவிடமிருந்து போன். "அட்டா , சங்கிதா...இப்போ சரக்கு கொஞ்சம் ஜாஸ்தியாப் போய்டுச்சு...நாளைக்குக் கூப்பிடுறேன்."

சொன்னபடி மறுநாள் சந்த்தித்திருக்கின்றனர். பார்க் ஷெரட்டன். வெஸ்ட்மின்ஸ்டர். அந்தப் பெண்களுக்குக் குடிக்கும் பழக்கம் இல்லை. (ஆச்சரியம்). அப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடல் இது.

சங்கீதா நிக்கியிடம் கேட்கிறாள். "அந்த லேடி யார் , உங்கள் மனைவியா ?"

" ஐய்யய்யோ , அந்தப் பெண்ணுக்கு 25 வயசுதான் இருக்கும். என் வயசு 50. அவள் எப்படி என் மனைவியாக இருக்க முடியும் ?"

" என்னது , உங்கள் வயது ஐம்பதா , நம்பவே முடியவில்லையே ?"

" என் மகன் வயசே 25. வேலையில் இருக்கிறான்."

" அடடா , அப்போ அவனையே நாங்கள் · ப்ரண்ட்ஸா வச்சுக்கிறோம். அவன் போட்டோவைக் காட்டுங்கள். உங்கள் செல் போனில் இருக்கும்தானே ?"

" சீ...சீ..என் வில்லன் போட்டொவை நானே எப்படி வைத்திருப்பேன் ?"

" ஓ காட்...இந்த அளவுக்கு நகைச்சுவையாகப் பேசும் ஆட்களை நாங்கள் பார்த்ததே இல்லை."

இதையெல்லாம் கேட்டுக் கேட்டு என் நவ துவாரத்திலும் புகை வர ஆரம்பித்தது. ஒரு அளவு இல்லையா ? 18 வயதுப் பெண்களா தோழிகள் ?

***

சென்ற வாரத்தில் ஒரு நாள் நானும் , பாலுவும் , நிக்கியும் வெஸ்ட்மின்ஸ்டரில் அமர்ந்திருந்தோம். அப்போது அந்தப் பெண்களைப் பற்றிய கதை ஓடிக் கொண்டிருந்தது. நான் ' பேரர் ' ஆறுமுகத்திடம் ஒரு பேனாவும் காகிதமும் கேட்டு இதைக் குறித்துக் கொண்டேன். (எனக்கு ஞாபக மறதி அதிகம்). Dakshin. Two girls. Baalu & Nikki. இவ்வளவுதான் குறிப்பு. இது போதும். மற்றதையெல்லாம் ஞாபகத்திலிருந்து அள்ளிவிடலாம். அப்போது வந்தார்கள் அந்த இரண்டுப் பெண்களும். நான் என் வழக்கமான இடத்தை விட்டு வேறொரு நாற்காலிக்கு மாறினேன்.

என் இடத்தில் அம்ர்ந்த அங்கிதா , அந்த இடத்தில் இருந்த குறிப்பேட்டைப் பார்த்து விட்டு "இது என்ன டூ கேர்ள்ஸ் ? தக்ஷண் ? யார் அது நிக்கி ?" என்று எங்களைப் பார்த்துக் கேட்க , நாங்கள் ரொம்பக் கஷ்டப்பட்டு பேச்சை மாற்றினோம். நிக்கி என்னை ஒரு விதமாகப் பார்த்தான். ' என்னென்ன பிரச்சினையெல்லாம் கொடுக்கிறாய் பார்த்தாயா ?' என்பது போல் இருந்தது அவன் பார்வை.

அவர்கள் இருவரும் என்னை அங்கிள் என்று அழைக்காமல் , சாரு என்று பெயர் சொல்லி அழைத்தது என் தவப்பயன் என்றுதான் என்று சொல்ல வேண்டும்.

அப்போது அந்த அல்கா என்னைப் பார்த்து "நீங்கள் கமல் போலவே இருக்கிறீர்கள்" என்று சொன்னாள். ஒரு முறை அல்ல. நான்கைந்து முறை சொன்னாள். கிளம்பும் போது அவர்கள் ரெஸ்ட் ரூம் சென்றிந்த தருணத்தில் நிக்கி என்னிடம் சொன்னான். "அந்த அல்கா என்ன , ஒரேயடியாக உளறுகிறாள் ?" " என்ன ?" " உன்னைப் போய் கமல் , கமல் என்கிறாள். இடியட். நீ சாதாரணமாக நடக்கும் போதே குடித்து விட்டு நடக்கிறாயா , குடிக்காமல் நடக்கிறாயா என்று தெரியாது. அப்படி நடப்பாய். உன்னைப் போய் கமல் என்கிறாள். லூஸு ..."

நிக்கி இப்படிச் சொன்னது ஒரு பழி வாங்குதலுக்காகத்தான். அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

***

29.3.2008.


Source : www.charuonline.com

Dangerous Secrets of Google Searching

http://rapidshare.com/files/210031916/Dangerous_Secrets_of_Google_Searching.pdf